லண்டன் ஒலிம்பிக் போட்டியில் நேற்று பெண்களுக்கான 55 கிலோ எடைப் பிரிவில் (பிரீ ஸ்டைல்) போட்டியின் முதல் சுற்றில் இந்திய வீராங்கனை கீதா போஹத் கலந்து கொண்டார். இதில் உலக பெண்கள் மல்யுத்த தரவரிசையில் 2வது இடத்தில் உள்ள கனடா வீராங்கனை டான்யா லீன் வெர்பீக் உடன் கீதா மோதினார்.
இதில் இந்திய வீராங்கனை கீதா போஹத் 1-3 என்ற புள்ளிக் கணக்கில் தோல்வி அடைந்தார். இருப்பினும் முதல் சுற்றில் கீதாவை வீழ்த்திய டான்யா லீன் வெர்பீக் இறுதிப் போட்டிக்கு முன்னேறினால், கீதா போஹத் வெண்கலப்பதக்கம் பெறுவதற்கான போட்டியில் பங்கேற்க வாய்ப்பு கிடைக்கும் என்று அறிவிக்கப்பட்டது.
இந்த நிலையில் காலிறுதி மற்றும் அரையிறுதி போட்டிகளில் வெற்றி பெற்ற கனடா வீராங்கனை டான்யா லீன் வெர்பீக் இறுதி போட்டிக்கு முன்னேறினார். இதன்மூலம் இந்திய வீராங்கனை கீதாவுக்கு, வெண்கலப்பதக்கம் வெல்லும் ரெப்பிசேஜ் என்ற சிறப்பு போட்டியில் பங்கேற்க வாய்ப்பு அளிக்கப்பட்டது.
இதில் கனடா வீராங்கனை வெர்பீக்கிடம் தோல்வி அடைந்த உக்ரைனின் லாசாரேவா, கொலம்பியாவின் ரென்டிரியா ஆகியோரை கீதா வீழ்த்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. ஆனால் உக்ரைனின் லாசாரேவா உடனான முதல் போட்டியில் கீதா போஹத் 0-3 என்ற புள்ளிக் கணக்கில் தோல்வி அடைந்து வெளியேறினார். இதனால் கீதா போஹத் வெண்கலப்பதக்கம் வெல்லும் வாய்ப்பும் பறிப்போனது.
கடந்த 2008 பெய்ஜிங் ஒலிம்பிக் போட்டியில் இந்திய மல்யுத்த வீரர் சுஷில் குமார், ரெப்பிசேஜ் சிறப்பு வாய்ப்பு போட்டியில் வெற்றி பெற்று வெண்கலப்பதக்கம் வென்றது குறிப்பிடதக்கது.