இந்தியாவின் மல்யுத்த வீரர் யோகேஷ்வர் தத்(29). கடந்த 2008ம் ஆண்டு பெய்ஜிங் ஒலிம்பிக் போட்டியில் கலந்து கொண்ட இவர், காலிறுதி போட்டி வரை முன்னேறினார். ஆனால் காலிறுதி போட்டியில் தோல்வியுற்றார். இதனால் ஒலிம்பிக் போட்டியில் பதக்கம் பெற முடியாமல் தவித்தார்.
கடந்த 2010ம் ஆண்டு காமன் வெல்த் போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற யோகேஷ்வர் தத், லண்டன் ஒலிம்பிக் போட்டியில் பதக்கம் வெல்ல வேண்டும் என்ற இலக்கை நிர்ணயித்தார். இதன்படி லண்டன் ஒலிம்பிக் போட்டியில் வெண்கலப்பதக்கம் வென்றார்.
மிட்டல் சாம்பியன்ஸ் டிரஸ்ட் தரப்பில் ஏற்பாடு செய்யப்பட்ட பாராட்டு விழாவில் கலந்து கொண்ட யோகேஷ்வர் தத், ஒலிம்பிக் போட்டியில் பதக்கம் வென்ற தனது அனுபவங்களை பகிர்ந்து கொண்டார். அப்போது அவருக்கு ரூ.31 லட்சம் பரிசுத்தொகை அறிவிக்கப்பட்டது.
இந்த நிலையில் ஒலிம்பிக் போட்டியில் பதக்கம் வெல்ல வேண்டும் என்பதற்காக கடந்த 4 ஆண்டுகளாக கடும் பயிற்சியுடன், தூக்கமின்றி தவித்ததாக யோகேஷ்வர் தத் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது,
மல்யுத்த போட்டியில் கலந்து கொண்ட போது, வலது கண்ணில் இந்த காயம் ஏற்பட்டது. ஆனால் இப்போது குணமாகி வருகிறது. விளையாட்டு வீரர்கள் பதக்கத்துடன் நாடு திரும்பும் போது, எங்களுக்கு சிறப்பான வரவேற்பு கிடைக்கிறது. ஒலிம்பிக் போட்டியில் பதக்கம் வென்ற திரும்பிய எனக்கு, கோலகலமான வரவேற்பு கிடைத்தது. விமான நிலையத்தில் காத்திருந்த ரசிகர்கள், என்னை தங்களின் தோளில் தூக்கி கொண்டு கொண்டாடினர்.
மல்யுத்த போட்டிகளில் அடுத்தடுத்து நான் காயமடைந்து வருவதால், விரைவில் அதில் இருந்து ஓய்வு பெற உள்ளேன். எனக்கு ஏற்பட்ட காயத்திற்கு, தென் ஆப்பிரிக்காவில் சிகிச்சை மேற்கொள்ள மிட்டல் சாம்பியன்ஸ் டிரஸ்ட் உதவியது.
கடந்த 2008ம் ஆண்டு பெய்ஜிங் ஒலிம்பிக் போட்டியில் பதக்கம் வென்றிருந்தால், அப்போதே ஓய்வு பெற்றிருப்பேன். ஆனால் அங்கு காயமடைந்து திரும்பிய நான் வெறுங்கையுடன் ஓய்வு பெற விரும்பவில்லை. லண்டன் ஒலிம்பிக்கில் வெண்கலப்பதக்கத்திற்கான போட்டியில் எனக்கு சிறப்பு வாய்ப்பு கிடைத்த போது, எனது முழு திறனையும் பயன்படுத்தி ஆடினேன். ஏனெனில் ஒலிம்பிக் பதக்கம் பெற அடுத்த 4 ஆண்டுகளுக்கு காத்திருக்க நான் விரும்பவில்லை.
பெய்ஜிங் ஒலிம்பிக் போட்டியில் தோல்வி அடைந்த பிறகு, கடந்த 4 ஆண்டுகளாக தினமும் காலையில் எழும் போது, ஒலிம்பிக் பதக்கம் குறித்த கனவுடன் தான் விழிப்பேன். இதனால் பல நாட்கள் தூக்கமின்றி, கடுமையான பயிற்சியுடன் லண்டன் சென்றேன்.
நான் கலந்து கொண்ட பிரிவில் மொத்தம் 19 மல்யுத்த வீரர்கள் கலந்து கொண்டனர். இதில் 6 வீரர், உலக சாம்பியன்கள் அல்லது ஒலிம்பிக் சாம்பியன்களாக பதக்கம் வென்றவர்கள். இருப்பினும் நான் தங்கப்பதக்கம் பெற வேண்டும் என்ற குறிக்கோளுடன் பயிற்சி மேற்கொண்டேன். ஆனால் தகுதிச் சுற்றில் வெற்றி பெற போராட வேண்டிய நிலை ஏற்பட்டது.
போட்டிகளில் வெற்றி பெற வேண்டும் என்ற ஒரே குறிக்கோளுடன் தான் ஆடினேன். வெற்றி பெற்றால் எனக்கு கிடைக்கும், விருதுகள், பரிசுத்தொகை, விளம்பரங்கள் ஆகியவற்றை நான் எதிர்பார்க்கவில்லை. இதனால் தான் நான் கேல் ரத்னா விருது பெற கூட விண்ணப்பிக்கவில்லை.
லண்டன் ஒலிம்பிக் போட்டியில் பதக்கம் வென்ற நான், 2016ம் ஆண்டு ரியோ ஒலிம்பிக் போட்டியில் கலந்து கொள்ள வேண்டும் என்று மக்கள் விரும்புகின்றனர். ஆனால் தற்போது 2014ம் ஆண்டு நடைபெற உள்ள ஆசிய விளையாட்டு போட்டி மற்றும் காமன்வெல்த் போட்டி ஆகியவற்றை குறித்து சிந்தித்து வருகிறேன். வரும் 2016ம் வரை நான் உடல்தகுதியுடன் இருந்தால், ரியோ ஒலிம்பிக் போட்டியில் நிச்சயம் கலந்து கொள்வேன் என்றார்.