டெல்லி காவல்துறையில் அதிகாரியாக இருப்பவர் தத். ஒலிம்பிக் போட்டிக்குக் கிளம்புவதற்கு முன்பே எபப்டியும் ஒரு பதக்கம் வெல்வேன் என்று சூளுரைத்திருந்தார். இப்போது தனது உறுதிமொழியை நிறைவேற்றி விட்டார். கடந்த இரண்டு ஒலிம்பிக் போட்டிகளில் வெல்லத் தவறிய பதக்கத்தை லண்டனில் பெற்று விட்டார் தத்.
ஆடவர் 60 கிலோ ப்ரீஸ்டைல் மல்யுத்தப் போட்டியில் அபாரமாக மோதிய தத், வெண்கலப் பதக்கம் வென்றார்.
அட்டகாசமான ஆட்டத்திறனை நேற்று வெளிப்படுத்தினார் தத். அதுவும் ஒன்றரை மணி நேரத்தில் ஐந்து பேருடன் மோதினார் என்பது குறிப்பிடத்தக்கது. இறுதியில் வட கொரியாவின் ஜோங் மியாங் ரியை பந்தாடி வெண்கலத்தை வென்றார்.
இந்தப் பதக்கம் இந்தியாவுக்குக் கிடைத்துள்ள 5வது பதக்கமாகும். ஒலிம்பிக் வரலாற்றில் அதிக அளவிலான பதக்கங்களை இந்தியா வென்றிருப்பது இதுவே முதல் முறையாகும் என்பதால் இந்தியர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.