பெண்களுக்கான தெற்காசிய கால்பந்து சாம்பியன்ஷிப் தொடர் இலங்கையில் நடைபெற்றது. இதில் இலங்கை, இந்தியா, நேபாளம் உட்பட மொத்தம் 8 அணிகள் மோதின. இதில் லீக் போட்டிகள் மற்றும் அரையிறுதியில் வெற்றி பெற்ற இந்திய அணி, நேற்று நடைபெற்ற இறுதி போட்டியில் நேபாளத்தை எதிர்கொண்டது.
போட்டியின் துவக்கம் முதலே இரு அணிகளும் வெற்றி பெற வேண்டும் என்ற துடிப்புடன் ஆடின. போட்டியின் 3வது நிமிடத்தில் நேபாள வீராங்கனை திபா அதிகாரி முதல் கோலை அடித்தார். ஆனால் அடுத்த 5வது நிமிடங்களில் இந்திய வீராங்கனை சுப்ரியா ராவித்து ராய் ஒரு கோலை அடுத்து பதிலடி கொடுத்தார். முதல் பாதியில் இரு அணிகளும் தலா ஒரு கோல் அடித்து சமநிலை வகித்தன.
இந்த நிலையில் போட்டியின் 64வது நிமிடத்தில் இந்தியாவின் பிம்பிம் தேவியும், 87வது நிமிடத்தில் கமலா தேவியும் தலா ஒரு கோல் அடித்து இந்திய அணிக்கு முன்னிலை பெற்று தந்தனர். ஆனால் நேபாள வீராங்கனைகளின் கோல் அடிக்கும் முயற்சிகள் தோல்வி அடைந்தது. இதன்மூலம் போட்டியின் முடிவில் இந்திய அணி 3-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று மீண்டும் கோப்பை கைப்பற்றியது.
இது குறித்து அகில இந்திய கால்பந்து சங்கம் தலைவர் பிரபூல் பட்டேல் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது,
இந்திய வீராங்கனைகள் ஆடுகளத்தில் சிறப்பாக ஆடி கடந்த காலத்தில் கிடைத்த பெருமையை காப்பாற்றி உள்ளனர். வெற்றி பெற்ற இந்திய அணிக்கும், அணியின் உதவி பணியாளர்களுக்கும் எனது வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.
முன்னதாக கடந்த 2010ல் நடைபெற்ற தெற்காசிய கால்பந்து தொடரின் இறுதிப் போட்டியில் இந்திய அணி 1-0 என்று நேபாளத்தை வீழ்த்தி கோப்பை வென்றது குறிப்பிடத்தக்கது.