லண்டன் ஒலிம்பிக் போட்டியில் ஆண்களுக்கான மல்யுத்த போட்டி நடைபெற்றது. இதில் 74 கிலோ எடைப்பிரிவிற்கான முதல் சுற்று போட்டியில் இந்திய வீரர் நர்சிங் யாதவ், கனடா வீரர் மேத்யூ ஜூஹாக் ஜென்டிரியை எதிர்த்து மோதினார். இந்த போட்டியில் நர்சிங் யாதவ் 1-3 என்ற புள்ளிக்கணக்கில் தோல்வி அடைந்து போட்டியில் இருந்து வெளியேறினார்.
இந்த நிலையில் கனடா வீரர் மேத்யூ, இறுதிப் போட்டிக்கு முன்னேறினால், இந்திய வீரர் நர்சிங் யாதவ் வெண்கலப்பதக்கத்திற்கான போட்டிக்கு முன்னேற ரெப்பிசேஜ் என்ற முறையில் வாய்ப்பு இருந்தது. ஆனால் அடுத்த சுற்றில் கனடா வீரர் மேத்யூ தோல்வியை தழுவியதால், அந்த வாய்ப்பும் பறிப்போனது.
அமித் குமார்:
ஆண்களுக்கான பிரீ ஸ்டைல் 55 கிலோ எடைப்பிரிவின் முதல் சுற்றில் இந்திய வீரர் அமித்குமார், ஈரான் வீரர் ஹாசன் சப்சாலி ரஹிமியை எதிர்கொண்டார். இதில் சிறப்பாக ஆடிய அமித் குமார் 3-1 என்ற புள்ளிக் கணக்கில் வென்று காலிறுதிக்கு முன்னேறினார்.
காலிறுதி போட்டியில் ஜார்ஜியா வீரர் விளாடிமர் கின்சிகாஷ்விலி உடன் மோதிய அமித் குமார், 1-3 என்ற புள்ளிக்கணக்கில் தோல்வி அடைந்தார். இதனால் மேற்கொண்டு அரையிறுதிக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்தார்.
இந்த நிலையில் இந்தியாவின் அமித்குமாரை வீழ்த்திய ஜார்ஜியா வீரர், அரையிறுதி போட்டியில் ஜப்பான் வீரர் ஷினிசி யுமோடா உடன் மோதி வெற்றி பெற்றார். இதன்மூலம் அவர் இறுதிப் போட்டிக்கு நுழைந்தார். இதனால் வெண்கலப்பதக்கத்திற்கான போட்டியில் பங்கேற்க இந்திய வீரர் அமித்குமாருக்கு ரெப்பிசேஜ் சிறப்பு வாய்ப்பு கிடைத்தது.
ஆனால் வெண்கலப்பதக்கத்திற்கான போட்டியில் பல்கோரியா வீரர் ரடோஸ்லாவ் வெலிகோ உடன் மோதிய அமித்குமார் 0-3 என்ற புள்ளிக்கணக்கில் தோல்வி அடைந்தார். இதனால் வெண்கலப்பதக்கம் வெல்லும் வாய்ப்பை இழந்த அமித்குமார், ஒலிம்பிக் போட்டியில் இருந்து வெளியேறினார்.