டெல்லி: சாம்பியன்ஸ் டிராபி போட்டியில் இர்பான் பதான் சேர்க்கப்படாமல் நீக்கப்பட்டதற்கு கிரிக்கெட் சாராத பிற காரணங்கள் உள்ளன என்று குற்றம் சாட்டியுள்ளார் அவரது அண்ணனும், ஆல் ரவுண்டருமான யூசுப் பதான்.சாம்பியன்ஸ் டிராபி போட்டியில் பங்கேற்கும் உத்தேச இந்திய அணியில் இர்பான் சேர்க்கப்படவில்லை. இதற்கு யூசுப் பதான் கண்டனம் தெரிவித்துள்ளார். கிரிக்கெட் அல்லாத பிற காரணங்களால்தான் இர்பான் நீக்கப்பட்டிருப்பதாக அவர் கூறியுள்ளார்.இதுகுறித்து அவர் கூறுகையில், இர்பான் எப்போதுமே சிறப்பாக செயல்படுபவர் ஆவார். அவரது பந்து வீச்சு காரணமாக அணியில் அவர் சேர்க்கப்படாமல் இல்லை. வேறு பிற காரணங்கள் இதில் அடங்கியுள்ளன. அவை கிரிக்கெட் சம்பந்தப்படாதது. என்ன நடந்து கொண்டிருக்கிறது என்பதை எல்லோரும் பார்த்துக் கொண்டுதான் உள்ளனர்.இதுகுறித்து பத்திரிக்கைகள்தான் எழுத வேண்டும். என்ன நடக்கிறது என்பதை நீங்கள்தான் (மீடியா) வெளியில் கொண்டு வர வேண்டும் என்றார் யூசுப்.கிரிக்கெட் வாரியத்தையும், தேர்வாளர்களையும் மனதில் வைத்தே இவ்வாறு குற்றம் சாட்டியுள்ளார் யூசுப் பதான் என்று கூறப்படுகிறது.ஆனால் இர்பான் பதான் சேர்க்கப்படாதது சரியான செயலே என்று முன்னாள் கிரிக்கெட் வீரர் மணீந்தர் சிங் கூறியுள்ளார்.இதுகுறித்து அவர் கூறுகையில், சமீப காலமாக டுவென்டி 20, ஒரு நாள் போட்டிகளில் குறைந்த திறனுடன்தான் செயல்பட்டு வருகிறார் இர்பான்.நான் கூட முன்பு இர்பான் பதானை டுவென்டி 20, ஒரு நாள் போட்டிகளில் சேர்க்க வேண்டும் என்று வலியுறுத்தி வந்தவன்தான். ஆனால் இப்போது அவர் முழுத் திறமையுடன் இல்லை.மேலும், பேட்டிங்கிலும் அவர் சரியில்லை. எனவே அவர் அணியில் சேர்க்கப்படாதது சரியான முடிவே.தம்பி சரியாக விளையாடவில்லை என்பதை முதலில் யூசுப் ஒத்துக் கொள்ளவேண்டும். அதை விட்டு விட்டு கிரிக்கெட் வாரியம் மீதும், தேர்வாளர்கள் மீதும் குற்றம் சாட்டக் கூடாது. இர்பானால் இப்போதுள்ள தகுதியில், டுவென்டி 20 போட்டியில் நான்கு ஓவர்களை வீச முடியும். ஆனால் ஒரு நாள் போட்டிகளில் அவரால் முழுமையாக 10 ஓவர்களையும் வீச முடியாது.யூசுப் பதான் தேவையில்லாமல் தேர்வாளர்களைக் குறை கூறுவதை தவிர்க்க வேண்டும் என்றார் மணீந்தர் சிங்.