லண்டன் ஒலிம்பிக் போட்டியில் கால்பந்து விளையாட்டு இடம் பெறுகிறது. இதில் உலகின் முன்னணி கால்பந்து அணிகளான ஸ்பெயின், பிரேசில், இங்கிலாந்து என்று மொத்தம் 16 அணிகள் பங்கேற்கின்றன. உலகம் எங்கும் உள்ள கால்பந்து ரசிகர்களை லண்டனில் திரட்டும் வகையில், போட்டிகளுக்கான 10 லட்சம் டிக்கெட்கள் விற்க ஒலிம்பிக் கமிட்டி திட்டமிட்டிருந்தது.
ஆனால் லண்டன் ஒலிம்பிக்கில் கால்பந்து போட்டிகளுக்கான டிக்கெட் விற்பனை மந்தமாக உள்ளது. இதனால் கால்பந்து போட்டிகள் நடைபெற உள்ள மைதானங்களில் பார்வையாளர்கள் நிரம்பி இருக்கும் வகையில், டிக்கெட் விற்பனையை பாதியாக குறைக்க லண்டன் ஒலிம்பிக் ஒருங்கிணைப்பு கமிட்டி தீர்மானித்துள்ளது.
இதனால் 5 லட்சம் டிக்கெட்களை மட்டுமே விற்பனை செய்யப்பட உள்ளது. மீதமுள்ள டிக்கெட்களுக்கான இடங்களை காலி செய்ய போவதாக லண்டன் ஒலிம்பிக் கமிட்டி அறிவித்துள்ளது.
லண்டன் ஒலிம்பிக்கில் கால்பந்து போட்டிகளுக்கான டிக்கெட்களில் இதுவரை 2,50,000 டிக்கெட்கள் விற்கப்பட்டுள்ளது. மேலும் 2,50,000 டிக்கெட்களை வரும் 10 நாட்களில் விற்று தீர்க்க வேண்டியுள்ளது. இதில் 1,50,000 டிக்கெட்கள் பள்ளி குழந்தைகளுக்காக இலவசமாக வழங்கப்பட உள்ளது.
லண்டன் ஒலிம்பிக்கில் கால்பந்து போட்டிகளின் டிக்கெட்களை தவிர, மற்ற விளையாட்டு போட்டிகளுக்கான டிக்கெட் விற்பனை மிக மும்முரமாக நடைபெறுகிறது.