ஷூகாய்: ஏ1 கிராண்ட் ப்ரீ கார் பந்தயத்தில் இந்தியாவின் நரேன் கார்த்திகேயன் முதலாவதாக வந்து அபார வெற்றி பெற்றுள்ளார். 22 நாடுகளை சேர்ந்த வீரர்கள் கலந்து கொள்ளும் ஏ1 கிராண்ட் ப்ரீ கார் பந்தயம் நடைபெற்று வருகிறது. 11 சுற்றுகளை கொண்ட இந்த போட்டியின் 5வது சுற்றுப் போட்டி சீனா நாட்டின் ஷூகாய் நகரில் நடைபெற்றது. இதன் பியூச்சர் ரேஸ் பந்தயத்தில் இந்திய வீரர் நரேன் கார்த்திகேயன் பந்தய தூரத்தை 1 மணி நேரம் 8 நிமிடம் 30 வினாடியில் கடந்து அபார வெற்றி பெற்றார். இதன் மூலம் இந்தப் போட்டியில் வெற்றி பெற்ற 14வது நாடு என்ற பெருமை இந்தியாவுக்கு கிடைத்துள்ளது. 2வது இடத்தில் நியூசிலாந்தின் ஜான் ரீட்டும், 3வது இடத்தில் தென்ஆப்ரிக்காவின் அட்ரியனும் வந்தனர். ஏ1 ஜிபி கார் பந்தயத்தில் நரேன் பெற்ற வெற்றியின் மூலம் இந்த போட்டியில் இந்தியா முதன் முறையாக வெற்றியை பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இதுகுறித்து நரேன் கார்த்திகேயன் கூறியதாவது, நியூசிலாந்து வீரர் ஜான்ரீட் எனக்கு போட்டியாக இருந்தார். இந்த வெற்றி சரியான நேரத்தில் கிடைத்து இருக்கிறது. நான் பல்வேறு பந்தயங்களில் பங்கேற்றுள்ளேன். இந்த வெற்றிதான் என்னை மிகவும் உற்சாகப்படுத்தி உள்ளது. எனது கார் பந்தய வாழ்க்கை முடிந்து விட்டதாக சிலர் கூறி இருந்தனர். என்னால் வெற்றி பெற முடியும் என்பதை நிரூபித்து விட்டேன். இது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை கொடுக்கிறது என்றார். பிரதமர் பாராட்டு: ஏ1 ஜிபி கார் பந்தயத்தில் வெற்றி பெற்ற நரேன் கார்த்திகேயன், அடுத்து நடைபெறவுள்ள ஏ1 ஜிபி சுற்றுப் போட்டிகளில் தொடர்ந்து வெற்றி வாகை சூட வேண்டும். அத்துடன் நாட்டில் உள்ள இளைய சமுதாயத்தினரை கார் பந்தயங்களில் பங்கு கொள்ள நரேன் ஒரு வழிகாட்டியாக இருப்பார் என்று பிரதமர் மன்மோகன் சிங் பாராட்டியுள்ளார்.