லண்டன் ஒலிம்பிக் போட்டியில் இந்தியாவில் இருந்து 13 விளையாட்டுகளில் தொடர்புடைய 81 வீரர்கள், வீராங்கனைகள் கலந்து கொண்டனர். இதில் விஜய்குமார் (துப்பாக்கி சுடுதல்), சுசில்குமார் (மல்யுத்தம்) ஆகியோர் வெள்ளிப் பதக்கமும், ககன் நரங் (துப்பாக்கி சுடுதல்), சாய்னா நேவால் (பாட்மிண்டன்), மேரிகோம் (குத்துச்சண்டை), யோகேஷ்வர் தத் (மல்யுத்தம்) ஆகியோர் வெண்கல பதக்கம் பெற்றனர். இதன்மூலம் இந்தியாவிற்கு மொத்தம் 6 ஒலிம்பிக் பதக்கங்கள் கிடைத்தது.
லண்டன் ஒலிம்பிக் போட்டியில் அறிமுகப்படுத்தப்பட்ட பெண்களுக்கான குத்துச்சண்டை போட்டியில் இந்திய வீராங்கனை மேரி கோம் கலந்து கொண்டு வெண்கலப்பதக்கம் வென்றார். அவர் லண்டனில் இருந்து நாடு திரும்பினார்.
டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் வந்திறங்கிய மேரி கோமை, நூற்றுக்கணக்கான ரசிகர்கள் வரவேற்றனர். மேரி கோம் உடன் அவரது கணவர் ஒன்லிர் கோம், அவரது தாய் அக்ஹம் கோம் ஆகியோர் வந்தனர்.
மல்யுத்த வீரர்கள்:
அதேபோல லண்டன் ஒலிம்பிக் போட்டியில் பதக்கம் வென்ற இந்திய மல்யுத்த வீரர்களான சுஷில்குமார் மற்றும் யோகேஷ்வர் தத் ஆகியோர் நாடு திரும்பினர். அவர்களை வரவேற்க, இரு வீரர்களின் குடும்பத்தார் மற்றும் ரசிகர்கள் டெல்லி விமான நிலையத்தில் காத்திருந்தனர்.
சுஷில்குமார் யோகேஷ்வர் தத் ஆகியோர் வருவதை பார்த்த சில ரசிகர்கள் உற்சாக மிகுதியில், நடனமாடியும், இனிப்பு வழங்கியும், இந்தியா ஒலிம்பிக் போட்டியில் பதக்கம் வென்றதை கொண்டாடினர். விமான நிலையத்தின் வெளியே இந்திய மல்யுத்த வீரர்களுக்கு மேளதாளத்துடன் கூடிய வரவேற்பு வழங்கப்பட்டது.
அதிகளவிலான ரசிகர்கள் கூடியதால், தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதில் ரசிகர்களை தடுத்து நிறுத்த வைத்திருந்த தடுப்புகள் தகர்ந்தது. இதனால் வீரர்களை பார்க்க கூடிய ரசிகர்களை கட்டுப்படுத்த போலீசார் திணறினர். இரு வீரர்களும் ரசிகர்களை பார்த்து கை அசைத்தபடி சென்றனர்.
இந்த நிலையில் விமான நிலையத்தில் இருந்து வெளியே வந்த சுஷில்குமாரை தோளில் சுமந்து சென்ற ரசிகர்கள், திறந்த டிராக்கில் ஏற்றி அழைத்து சென்றனர். ஆனால் யோகேஷ்வர் காரில் ஏறி சென்றுவிட்டார்.
இது குறித்து இந்திய வீராங்கனை மேரி கோம் கூறியதாவது,
ஒலிம்பிக் போட்டியில் வெண்கலப்பதக்கம் வென்ற முதல் இந்திய குத்துச்சண்டை வீராங்கனை என்பதை நினைக்கும் போது, மகிழ்ச்சியாக உள்ளது. ஆனால் அரையிறுதி போட்டியில் வென்று தங்கப்பதக்கம் வெல்ல முடியாமல் போனது வருத்தம் அளிக்கிறது.
அரையிறுதி போட்டியில் நான் நினைத்தபடி எனது உடலை வேகமாக இயக்க முடியவில்லை. ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்ற போது எனக்கு பயம் ஏற்படவில்லை. ஆனால் அரையிறுதியில் அதிகளவில் என்னால் தாக்க முடியவில்லை. எதிராளியாக களமிறங்கிய நிக்கோலாவிற்கு ஆதரவாக எழுந்த பார்வையாளர்களின் கோஷம் எனது கவனத்தை திசை திருப்பியதா என்று தெரியவில்லை என்றார்.