இங்கிலாந்து தலைநகர் லண்டனில் உலக பில்லியர்ட்ஸ் சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற்றது. இதில் நேற்று நடைபெற்ற ஒற்றையர் இறுதிப் போட்டியில் இந்திய வீரர் பங்கஜ் அத்வானியை, நடப்பு சாம்பியனான இங்கிலாந்து வீரர் மைக் ரஸ்சல் எதிர்கொண்டார்.
சொந்த மண்ணில் களமிறங்கிய மைக் ரஸ்சல் துவக்கத்தில் புள்ளிகளை சேர்த்து வந்தார். ஆனால் அனுபவமிக்க மைக் ரஸ்சலை சிறப்பாக எதிர் கொண்ட பங்கஜ் அத்வானி, போட்டியின் முடிவில் 1895-1216 என்ற புள்ளி கணக்கில் வெற்றி பெற்றார். இதன்மூலம் பங்கஜ் அத்வானி உலக பில்லியர்ட்ஸ் சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்றார்.
27 வயதாகும் பங்கஜ் கடந்த 2005ம் ஆண்டு பங்கஜ் அத்வானி நேரம் மற்றும் புள்ளிகள் அடிப்படையில் உலக பில்லியர்ட்ஸ் சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்று சாதனை படைத்தார். அதன்பிறகு கடந்த 2008ம் ஆண்டு அதே பாணியில் சாம்பியன்ஷிப் மீண்டும் வென்றார்.
மேலும் கடந்த 2007 மற்றும் 2009ம் ஆண்டு நேரம் அடிப்படையில் பங்கஜ் அத்வானி, உலக சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்றார். இந்த நிலையில் தற்போது 7வது முறையாக உலக சாம்பியன்ஷிப் பட்டத்தை பங்கஜ் அத்வானி வென்றுள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது,
7வது முறையாக உலக சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்றது மகிழ்ச்சி அளிக்கிறது. இந்த ஆண்டு பில்லியர்ட்ஸ் மற்றும் ஸ்னுக்கர்ஸ் போட்டிகளில் கலந்து கொள்ளலாம் என்ற கடினமான முடிவை எடுத்தேன். இந்த நிலையில் இரண்டிலும் முன்னணி வீரராக விளங்க முடிந்ததை நினைத்து மகிழ்ச்சி அடைகிறேன்.
வெற்றி என்பது மற்றவர்களிடம் உள்ள பொக்கிஷங்களை பெறுவது போன்றதாகும். இந்த ஆண்டு நான் எதிர்கொண்ட சாவல்களுக்கு, தற்போதைய வெற்றி ஒரு பரிசாக கிடைத்துள்ளது. நமது மனதில் உறுதி இருந்தால், நம்மால் செய்ய முடியாதது ஒன்றும் இல்லை என்பதை இந்த வெற்றி நிரூபித்துள்ளது என்றார்.