இங்கிலாந்து தலைநகர் லண்டனில் ஒலிம்பிக் போட்டி முடிவடைந்த நிலையில், தற்போது மாற்று திறனாளிகளுக்கான பாராலிம்பிக்ஸ் போட்டி நடைபெற்று வருகிறது. இதில் சில உடலுறுப்புகள் இல்லாத வீரர்கள், செயற்கையான உறுப்புகளை பயன்படுத்தி போட்டிகளில் பங்கேற்கின்றனர். கால் இல்லாத வீரர்கள் செயற்கை கால்களை பயன்படுத்தி ஓட்டப்பபந்தயத்தில் பங்கேற்கின்றனர்.
இந்த நிலையில் ஆண்களுக்கான 200 மீட்டர் ஓட்டப்பந்தயம் நேற்று நடைபெற்றது. இதில் பிரேசில் நாட்டை சேர்ந்த ஆலன் ஒலிவீரா வெற்றி பெற்று தங்கப்பதக்கம் வென்றார். மேலும் 21.45 நொடிகளில் பந்தயத்தூரத்தை கடந்த அவர், புதிய உலக சாதனையை படைத்தார். தென் ஆப்பிரிக்க வீரர் ஆஸ்கர் பிஸ்டோரியஸ் 21.52 நொடிகளில் பந்தயத்தூரத்தை கடந்து வெள்ளிப்பதக்கம் வென்றார்.
இந்த நிலையில் பிரேசில் வீரர் ஓட்டப்பந்தயத்தின் போது, வழக்கத்திற்கு மாறாக நீண்ட செயற்கை கால்களை பொறுத்தி ஓடியதாக, தென் ஆப்பிரிக்கா வீரர் ஆஸ்கர் பிஸ்டோரியஸ் புகார் அளித்துள்ளார். ஆனால் அதை மறுத்துள்ள சர்வதேச பாராலிம்பிக்ஸ் கமிட்டி, பிரேசில் வீரரின் சாதனையை அங்கீகரித்துள்ளது.
இது குறித்து சர்வதேச பாராலிம்பிக்ஸ் கமிட்டி கூறியதாவது,
பாராலிம்பிக்ஸின் ஓட்டப்பந்தயத்தில் கலந்து கொள்ளும் வீரர்களின் செயற்கை கால்கள், பிளேடுகள் என்று அழைக்கப்படுகிறது. இந்த பிளேடுகளை தகுந்த பரிசோதனைக்கு பிறகே, போட்டிகளில் அணிந்து ஓட அனுமதிக்கப்படுகிறது. எனவே ஆலன் தனது சொந்த உடல்திறனை பயன்படுத்தி வெற்றி பெற்றுள்ளார். இதனால் அவரது உலக சாதனை அங்கீகரிக்கப்படுகிறது என்று தெரிவித்துள்ளது.