டெல்லி: இந்தியாவின் முன்னணி கார்ப் பந்தய வீரர் நரேன் கார்த்திகேயனின் பெயர் அர்ஜூனா விருதுக்குப் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.சிறந்த விளையாட்டு வீரர், வீராங்கனைகளுக்கு மத்திய அரசு ஆண்டுதோறும் அர்ஜூனா விருது வழங்கி கெளரவித்து வருகிறது.ஒவ்வொரு விளையாட்டுப் பிரிவிலும் இந்த விருதுகள் வழங்கப்படும்.இந்த ஆண்டுக்கான விருதுக்கு கார்ப் பந்தயப் பிரிவில் தமிழக வீரர்கள் நரேன் கார்த்திகேயன், கருண் சந்தோக், பைக் வீரர் திலீப் ரோஜர் ஆகியோரது பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ளன.கார் ரேஸ் வீரர் அர்ஜூனா விருதுக்குப் பரிந்துரைக்கப்படுவது இதுவே முதல் முறையாகும்.கோவையைச் சேர்ந்தவரான நரேன், 2005-ம் ஆண்டு பார்முலா-1 கார் பந்தயத்தில் பங்கேற்றார். இந்தப் பந்தயத்தில் பங்கேற்ற முதல் இந்தியர் என்ற பெருமையையும் அவர் பெற்றார்.அதன் பின்னர் தற்போது ஏ1 போட்டிகளில் கலந்து கொண்டு வருகிறார் நரேன்.