பெய்ஜிங்: பெய்ஜிங்கில் நடைபெற்று வரும் மல்யுத்த போட்டியில் இந்திய வீரர் சுஷில் குமார் வெண்கலம் வென்றார். 56 ஆண்டுகளுக்கு பின் ஒலிம்பிக்கில் மல்யுத்தத்தில் இந்தியா வென்றுள்ள முதல் பதக்கம் இது தான். இதற்கு முன் 1952ம் ஆண்டு பின்லாந்தில் நடந்த ஒலிம்பிக் போட்டியில் இந்திய வீரர் கசபா தாதாசாகிப் ஜாதவ் இந்தியாவுக்கு முதல் வெண்கல பதக்கத்தை வென்று தந்தார். இந் நிலையில் சீன தலைநகர் பெய்ஜிங்கில் நடைபெற்று வரும் மல்யுத்த போட்டியில் இந்திய வீரர் சுஷில்குமாரும் கஜகஸ்தான் வீரர் லியோநிட் ஸ்பிரிட்டோநவ்வும் இன்று மோதினர். முதல் சுற்றில் 2-1 புள்ளிகள் வித்தியாசத்தில் சுஷில் வெற்றி பெற்றார். இரண்டாவது சுற்றில் 1-0 கணக்கில் வெற்றி பெற்றார். கடைசி சுற்றில் டை பிரேக்கரில் 1-0 என்ற புள்ளி கணக்கில் லியோநிட்டை வீழ்த்தி சுஷில் வெண்கலம் வென்றார். முதலில் 66 கிலோ எடை பிரிவில் முதல் போட்டியில் சுஷில்குமார் தோல்வியை தழுவினார். பின்னர் வைல் கார்டு என்ட்ரீ மூலம் வெண்கலத்திற்காக போட்டியிடும் சுற்றில் சுஷில் இடம்பெற்றார். இதையடுத்து நடந்த முதல் போட்டியில் அமெரிக்காவின் டக் சேவாப்புடன் மோதி 7-4 புள்ளிகள் கணக்கில் வெற்றி பெற்றார். இரண்டாவது போட்டியில் பெலாஸ் வீரர் பேட்ரிரவ் ஆல்பர்ட்டுடன் மோதினார். இதில் முதல் சுற்றில் டை பிரேக்கரில் 1-0 கணக்கில் மீண்டும் வெற்றி பெற்றார். இரண்டாவது சுற்றில் 0-4 புள்ளி கணக்கில் தோற்றார். பின்னர் மூன்றாவது சுற்றில் அசுரத்தனமான பலத்தை காட்டி 7-0 என்ற புள்ளி கணக்கில் வென்றார். இறுதியில் 8-4 என்ற புள்ளிக் கணக்கில் வெற்றி பெற்ற சுஷில், வெண்கல பதக்கத்தின் இறுதி போட்டியில் இடம் பெற்றார். இன்று வெண்கலத்திற்கான இறுதி போட்டியில் கஜகஸ்தான் வீரர் லியோநிட் ஸ்பிரிட்டோநவ்வை அவர் வெற்றி கொண்டார். 56 ஆண்டுகளுக்கு பிறகு மல்யுத்தத்தில் இந்தியாவுக்கு சுஷில்குமார் மூலம் வெண்கலம் கிடைத்துள்ளது. இதற்கு முன் 1952ம் ஆண்டு பின்லாந்தில் நடந்த ஒலிம்பிக் போட்டியில் இந்திய வீரர் கசபா தாதாசாகிப் ஜாதவ் இந்தியாவுக்கு முதல் வெண்கல பதக்கத்தை வென்று தந்தார். இதுகுறித்து சுஷில்குமார் கூறுகையில், வெண்கலம் வென்றது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. இந்தியாவுக்கு இன்னும் பல பதக்கங்களை பெற்றுத் தருவேன். போட்டியில் நான் எதிர்கொண்ட வீரர்கள் எல்லாருமே மிகவும் பலம் வாய்ந்தவர்கள் என்றார். இந்திய ஒலிம்பிக் சங்க தலைவர் சுரேஷ் கல்மாடி கூறுகையில், இந்த சாதனை மிகுந்த மகிழ்ச்சி தருகிறது. சுஷில் குமார் மீது அதிக நம்பிக்கை வைத்திருந்தோம். எங்கள் நம்பிக்கைகயை அவர் நிரூபித்து விட்டார். அவரது இந்த சாதனை பெருமை அளிக்கிறது என்றார். ஜனாதிபதி-பிரதமர் வாழ்த்து: பதக்கம் வென்று இந்தியாவுக்குப் பெருமை சேர்த்துள்ள சுஷில் குமாருக்கு குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீல் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதேபோல பிரதமர் மன்மோகன் சிங், லோக்சபா சபாநாயகர் சோம்நாத் சாட்டர்ஜி ஆகியோரும் வாழ்த்து தெரிவித்துள்ளனர். டெல்லி முதல்வர் ஷீலா தீக்ஷித், சுஷில் குமாருக்கு வாழ்த்து தெரிவித்ததோடு ரூ. 50 லட்சம் பரிசுத் தொகையையும் அறிவித்துள்ளார்.