லண்டன் ஒலிம்பிக் போட்டியில் ஆண்களுக்கான 66 கிலோ ப்ரீ ஸ்டைல் மல்யுத்த போட்டியில் இந்திய வீரர் சுஷில் குமார் கலந்து கொண்டார். அரையிறுதி போட்டி வரை முன்னேறிய அவர், கஜகஸ்தான் வீரர் அக்சுரக் டனாடரோவ் உடன் மோதினார். போட்டியில் சிறப்பாக ஆடிய சுஷில் குமாரிடம், கஜகஸ்தான் வீரர் திணறினார்.
இந்த நிலையில் போட்டியின் இடையே கஜகஸ்ஜான் வீரரின் காதில் இருந்து ரத்தம் வந்தது. அப்போது சுஷில் குமார் தனது காதை கடித்துவிட்டதாக, அக்சுரக் புகார் கூறினார். ஆனால் நடுவர்கள் அதை கண்டுகொள்ளவில்லை. அதன்பிறகு அரையிறுதியில் வெற்றி பெற்று இறுதி போட்டியில் தோல்வியை தழுவினார் சுஷில் குமார். இதன்மூலம் இந்தியாவிற்கு ஒலிம்பிக் வெள்ளிப்பதக்கம் வென்று தந்தார்.
நாடு திரும்பிய சுஷில் குமார், செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். இதில் சுத்த சைவமான தான் யார் காதையும் கடிக்கவில்லை என்று தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறியதாவது,
எனது வாழ்க்கையில் ஏற்பட்ட முன்னேற்றத்திற்கு முழு காரணம் எனது தந்தையின் உழைப்பு தான். எனது 14 வயது முதல் மல்யுத்த போட்டிக்காக பயிற்சி செய்து வருகிறேன். இதற்காக பல நாட்கள் நான் வீட்டை விட்டு பிரிந்து செல்ல வேண்டிய காட்டயம் ஏற்பட்டுள்ளது. என் தந்தைக்கு தொண்டையில் புற்றுநோய் ஏற்பட்டு மிகவும் சிரமப்பட்டார்.
அப்போது டாக்டர்களிடம் காட்டிய போது, அவருக்கு ஓய்வு தேவை என்று கூறி கை விரித்துவிட்டனர். ஆனால் எனது தந்தை அதிகாலையில் எழுந்து பால் வாங்கி வந்து, என்னை ஊக்கப்படுத்தி மல்யுத்த பயிற்சிக்கு அனுப்பி வைத்தார். அதன்பிறகு வேலைக்கு சென்றுவிடுவார்.
நான் ஒரு மல்யுத்த வீரரான மாறி, பதக்கங்களை பெற எனது கடின உழைப்பு மட்டுமல்ல, எனது தந்தையின் ஊக்கமும், உழைப்பும் அதில் அடங்கி உள்ளது. புற்றுநோயுடன் வாழ்க்கையில் போராடிய எனது தந்தை இப்போது குணமாகி நன்றாக உள்ளார்.
ஒலிம்பிக் போட்டியின் அரையிறுதி போட்டியில் நான் கசகிஸ்தான் வீரரின் காதை கடித்ததாக புகார் எழுந்தது. நான் சுத்த சைவம். நான் யார் காதையும் கடிக்கவில்லை என்றார்.