லண்டன் ஒலம்பிக் போட்டியில் ஆண்களுக்கான ஈட்டி ஏறிதல் போட்டியில் டிரினிடாட் அண்டு டொபாக்கோ நாட்டை சேர்ந்த கேஷோர்ன் வால்காட் கலந்து கொண்டார். 19 வயதான வால்காட் 84.58 மீட்டர் தூரத்திற்கு ஈட்டி எறிந்து தங்கப்பதக்கம் வென்றார். ஒலிம்பிக் போட்டியில் டிரினிடாட் அண்டு டொபாக்கோவை சேர்ந்த வீரர் தங்கப்பதக்கம் வெல்லுவது இது 2வது முறையாகும்.
முன்னதாக கடந்த 1976ம் ஆண்டு ஒலிம்பிக்கில் 100 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் டிரினிடாட் வீரர் ஹாஸ்லே கிராவ்போர்டு முதல் முறையாக தங்கப்பதக்கம் வென்றார். இந்த நிலையில் லண்டன் ஒலிம்பிக் போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற வால்காட், பரிசு மழையில் நனைந்து வருகிறார்.
லண்டன் ஒலிம்பிக் போட்டியில் வால்காட் தங்கப்பதக்கம் வென்றதை பாராட்டி, நேற்றுமுன்தினம் நாட்டில் தேசிய விடுமுறை அறிவித்தார் டிரினிடாட் நாட்டு பிரதமர் கம்லா பெர்சாத். மேலும் விமான நிலையத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் கூடி, நாடு திரும்பிய வால்காட்டை வரவேற்றனர்.
36 ஆண்டுகளுக்கு பிறகு நாட்டிற்கு ஒலிம்பிக் போட்டியில் தங்கப்பதக்கம் வென்று தந்த வால்காட்டிற்கு, 20 ஆயிரம் சதுரஅடி அளவு கொண்ட வீடு, 1 லட்சம் யூரோ பரிசுத் தொகையும் வழங்கப்படும் என்று அந்நாட்டு பிரதமர் கம்லா அறிவித்தார்.
மேலும் வால்காட்டின் சாதனையை பாராட்டி, கரீபியின் ஏர்லைன்ஸை சேர்ந்த ஒரு விமானம் மற்றும் வரலாற்று சிறப்புமிக்க கலங்கரை விளக்கம் ஆகியவற்றிற்கு, அவரது பெயர் சூட்டப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து வால்காட் கூறியதாவது,
ஒலிம்பிக் போட்டியில் டிரினிடாட் அண்ட் டொபாக்கோ நாட்டின் கொடியை சுமந்து செல்ல பெருமையாக இருந்தது. எனது சாதனைக்கு உதவியாக இருந்த தாயார், தந்தை, சகோதரர், சகோதரி மற்றும் அனைவருக்கும் எனது நன்றியை தெரிவித்து கொள்கிறேன் என்றார்.