லண்டன் ஒலிம்பிக் போட்டியில் இந்திய ஹாக்கி அணி பங்கேற்றது. இதில் பங்கேற்ற அனைத்து லீக் போட்டிகளிலும் தோல்வி அடைந்த இந்திய அணி, அணிகளின் பட்டியலில் கடைசி(12வது) இடத்தை பிடித்தது.
ஒலிம்பிக்கில் 8 முறை தங்கப்பதக்கம் வென்ற இந்திய ஹாக்கி அணி, லண்டன் ஒலிம்பிக் போட்டியில் அடைந்த பரிதாப தோல்வி, நாட்டு மக்களிடையே வருத்தத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்த நிலையில் இந்திய அணியின் தோல்விக்கு, அணியில் உள்ள அனைத்து வீரர்களும் பொறுப்பேற்பதாக, இந்திய அணியின் கேப்டன் பரத் சேத்ரி தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது,
ஹாக்கி என்பது ஒரு குழு போட்டி. எனவே யாரையும் தனிப்பட்ட முறையில் குறை கூட விரும்பவில்லை. நாங்கள் ஒரு அணியாக செயல்பட்டு தோல்வியை தழுவினோம். எங்களால் இந்திய ஹாக்கி ரசிகர்களுக்கு ஏற்பட்ட ஏமாற்றத்திற்கு, அணியின் சார்பாக நான் மன்னிப்பு கேட்டு கொள்கிறேன்.
இந்திய அணிக்கு திறமை உள்ளது. ஆனால் ஒலிம்பிக் போட்டியில் எங்களின் முழு திறனையும் வெளிபடுத்த முடியவில்லை என்பது உண்மை. ஒலிம்பிக்கில் பங்கேற்க வேண்டும் என்பது ஒவ்வொரு விளையாட்டு வீரரின் விருப்பம். ஆனால் எங்களின் முயற்சிகள் அனைத்தும் வீணாகிவிட்டது. எங்களிடம் உள்ள திறமையில் 30 முதல் 35 சதவீதம் மட்டுமே ஒலிம்பிக்கில் வெளிப்படுத்தினோம்.
ஒலிம்பிக் போட்டியில் நாங்கள் ஒரு குழுவாக செயல்படவில்லை. மேலும் ஒவ்வொரு போட்டியிலும் செய்த தவறையே மீண்டும் மீண்டும் செய்தோம். தாக்குதல் ஆட்டம் ஆடி, கோல்களை போட நாங்கள் தவறிவிட்டோம். இதனால் ஒலிம்பிக் போட்டியில் சாதிக்கலாம் என்று நினைத்த எங்களுக்கு, தோல்வி தான் மிஞ்சியது.
ஒலிம்பிக் போட்டிக்கான தகுதி போட்டிகளில் இந்திய அணி, குழுவாக செயல்பட்டு சிறப்பாக ஆடியது. அதேபோல ஒலிம்பிக் போட்டியிலும் இந்திய அணி ஆடியிருந்தால், தொடர் தோல்விகளை தவிர்த்திருக்கலாம். போட்டியில் வெற்றி, தோல்விகள் சகஜம் என்றார்.