அமெரிக்காவை சேர்ந்த பிரபல சைக்கிள் பந்தய வீரர் லான்ஸ் ஆம்ஸ்டிராங்(40). நீண்டதூர சைக்கிள் பந்தயமான 'டூர் டி பிரான்ஸ்' போட்டிகளில் கலந்து கொண்டு, கடந்த 1996 முதல் 2005ம் ஆண்டு வரை மொத்தம் 7 முறை பட்டம் வென்று சாதனை படைத்தவர்.
இந்த நிலையில் கடந்த 1996ம் ஆண்டு விரைச்சிரை புற்றுநோய் (டெஸ்டிக்குலர் கேன்சர்) மூலம் பாதிக்கப்பட்ட இவர், அதற்காக அறுவை சிகிச்சை செய்து கொண்டார். அதன்பிறகு குணமடைந்த லான்ஸ், மீண்டும் போட்டிகளில் கலந்து கொண்டார்.
கடந்த ஆண்டு(2011) சைக்கிள் பந்தய போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்ற லான்ஸ், புற்றுநோய் அறக்கட்டளை ஒன்றை துவங்கி கோடிக்கணக்கில் நிதி திரட்டியுள்ளார். இதன்மூலம் புற்றுநோய்க்கு சிகிச்சை அளிக்க முடியாமல் உள்ள வசதியற்ற ஏழைகளுக்கு உதவி வருகிறார்.
இந்த நிலையில் கடந்த 1999ம் ஆண்டு லான்ஸூற்கு நடத்தப்பட்ட ஊக்கமருந்து சோதனையில் தடை செய்யப்பட்ட 'எரித்ரோபோய்டீன்' என்ற ஊக்கமருந்து பயன்படுத்தி இருப்பது தெரியவந்தது. இதையடுத்து அமெரிக்க ஊக்க மருந்து தடுப்பு மையம்(யு.எஸ்.ஏ.டி.ஏ.) இவர் மீது குற்றச்சாட்டியது.
இது குறித்து யு.எஸ்.ஏ.டி.ஏ வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது,
தடை செய்யப்பட்ட ஊக்க மருந்தை லான்ஸ் மட்டும் பயன்படுத்தவில்லை. தன்னோடு இருந்த சகவீரர்களுக்கும், அதை கொடுத்து உதவி உள்ளார். இதை லான்ஸின் 11 சகவீரர்களும் ஒப்புக் கொண்டுள்ளனர். தடை செய்யப்பட்ட ஊக்க மருந்தை இவர்கள் அனைவரும் தொடர்ந்து பயன்படுத்தி வந்தாக தெரிவித்துள்ளனர். இதனால் லான்ஸ் ஆம்ஸ்டிராங்கிற்கு வாழ்நாள் தடை விதிக்க வேண்டும் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.
இதற்கு சர்வதேச சைக்கிள் பந்தய சங்கமும் நேற்று ஒப்புதல் அளித்தது. மேலும் ஊக்க மருந்து சோதனையில் சிக்கிய ஆம்ஸ்டிராங்கின் 7 பட்டங்களும் அவரது சாதனைகளும் திரும்ப பெறப்பட்டன.
இது குறித்து உலக சைக்கிள் பந்தய சங்கத்தின் தலைவர் பட் மெக் குவய்ட் கூறியதாவது,
லான்ஸ் ஆம்ஸ்டிராங்கிற்கு இனி சைக்கிள் பந்தயத்தில் இடமே இல்லை. இவரது சாதனைகள் அனைத்தும் மறக்கப்பட்டதாக கருதப்படுகிறது. லான்ஸூற்கு எதிராக அளிக்கப்பட்ட சாட்சிகளின் மூலம் அவர் தடை செய்யப்பட்ட ஊக்க மருந்தை பயன்படுத்தி வந்தது தெரியவந்துள்ளது. மேலும் இது குறித்து தகவலை வெளியே கூறவிடாமல் லான்ஸ் தடுத்துள்ளார் என்றார்.