வினேஷ் பொகத்துக்கு வந்த கவலை
இதுகுறித்து வினேஷ் தனது டிவிட்டரில் போட்டுள்ள பதிவில், இந்த அறிவிப்பு எனக்கு ஏமாற்றத்தையே கொடுத்துள்ளது. இது எனக்கு மட்டுமல்ல ஒவ்வொரு தடகள வீரர், வீராங்கனைக்கும் வரும் பயம்தான். நினைத்தது மாதிரியே, பயந்தது மாதிரியே நடந்து விட்டது. இதுபோன்ற போட்டிகளில் ஒரு வருட காலம் காத்திருப்பது என்பது மிக நீண்டது. அதை யாருமே விரும்ப மாட்டார்கள் என்று கூறியுள்ளார்.
மனசுல அலை அடிக்குது
இப்போதைக்கு என்ன கருத்து சொன்னால் சரியாக இருக்கும் என்று எனக்குத் தெரியவில்லை. ஆனால் எனது மனசுக்குள் அப்படி ஒரு அலை அடிக்கிறது. நிறைய எண்ணங்கள் ஓடுகின்றன. இது உலகுக்கே போதாத நேரம். மிகப் பெரிய அளவில் உலகம் முழுமையும் பாதிக்கப்பட்டுள்ளது. விளையாட்டுத் துறை அதிக அளவில் பாதிப்பை சந்தித்துள்ளது என்றார் வினேஷ்.
இப்போது போட்டியை நடத்துவது சரியில்லை
ஒலிம்பிக் போட்டிகளை தற்போதைய சூழலில் நடத்துவது சரியாக இருக்காது என்று ஜப்பான் அரசு கூறி விட்டதால் வேறு வழியில்லாமல் போட்டியை அடுத்த வருடத்திற்கு சர்வதசே ஒலிம்பிக் சங்கம் தள்ளி வைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இதை பலர் வரவேற்றுள்ளனர் என்றாலும் வீரர்களுக்கும் வீராங்கனைகளுக்கும் சற்று ஏமாற்றம்தான். காரணம் கடுமையாக எடுத்து வந்த பயிற்சிகள் இப்போது வீணாகி விட்டதே என்பதுதான்.
சவாலை வலிமையுடன் சந்திப்போம்
வினேஷ் மேலும் கூறுகையில், இப்போது அனைவரும் ஒருங்கிணைந்து இந்த சவாலை வலிமையுடன் சந்திக்க வேண்டும். அசாதாரண சூழ்நிலைக்கு எதிராக ஒருங்கிணைந்து போராட வேண்டும். நம்மால் இந்த சவாலை சமாளித்து மேலெழுந்து வர முடியும் என்ற உணர்வுக்குள் நாம் போக வேண்டும். நமது இலக்கிலிருந்து தவறி விடாமல் உறுதியுடன் இருக்க வேண்டிய நேரம் இது என்று கூறியுள்ளார்.