ஜஸ்டின் லாங்கர் ஆலோசனை
சமூக வலைதளங்கள்மூலம் இளம் வீரர்களுக்கு அச்சுறுத்தல்கள் விடப்படுவதாகவும் அவர்கள் அதிலிருந்து தள்ளி இருக்க வேண்டும் என்று ஆஸ்திரேலிய தலைமை பயிற்சியாளர் ஜஸ்டின் லாங்கர் தெரிவித்துள்ளார். தொலைக்காட்சி தொகுப்பாளர் சார்லி வெப்ஸ்டருடன் மை ஸ்போர்ட்டிங் மைண்ட் நிகழ்ச்சியில் கலந்துரையாடிய லாங்கர் இதனை தெரிவித்துள்ளார்.
மற்றவர்களின் ஆலோசனை தேவையில்லை
நம்மீதும் நம்முடைய வளர்ச்சிமீதும் அக்கறை கொண்ட நண்பர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்களின் ஆலோசனைகளே நம்மை வளர்க்கும் என்றும் அவர் கூறியுள்ளார். நம்முடைய நிறை எது குறை எது என்று நமக்கு பரிட்சயமில்லாதவர்கள் கொடுக்கும் ஆலோசனைகள் நமக்கு தேவையில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஜஸ்டின் லாங்கர் அதிர்ச்சி
கடந்த வருடத்தில் இங்கிலாந்து பௌலர் ஜோப்ரா ஆர்ச்சர் நியூசிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இனவெறி தாக்குதலுக்கு உள்ளானார். இந்நிலையில் கடந்த மேற்கிந்திய தொடரிலும் அவர் இன்ஸ்டாகிராம் மூலம் தவறாக பேசப்பட்டார். இதுகுறித்து தன்னுடைய அதிர்ச்சியை வெளியிட்ட ஜஸ்டின் லாங்கர், கடந்த உலக கோப்பை மற்றும் ஆஷஸ் தொடர்களில் தன்னுடைய அணி வீரர்கள் இவ்வாறு சமூகவலைதளங்கள் மூலம் தவறாக பேசப்பட்டது தனக்கு அதிர்ச்சியளித்ததாக கூறினார்.
மனஉளைச்சலை ஏற்படுத்தும்
கடினமாக உழைத்து தன்னுடைய திறமையை வெளிக்காட்ட விரும்பும் வீரர்களுக்கு இவ்வாறான தவறான பேச்சுக்கள் மிகுந்த மனஉளைச்சலை அளிக்கும் என்றும் மக்கள் சமூகவலைதளங்களில் தான் நினைத்தவற்றையெல்லாம் பேசி வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார். இதில் எந்த நியாயமும் இல்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.