சென்னை: தமிழக ரஞ்சி கிரிக்கெட் வீரர் சுப்பிரமணியம் பத்ரிநாத், விதர்பா கிரிக்கெட் அணிக்காக விளையாட திட்டமிட்டுள்ளதாக தெரிவித்தார்.
சென்னையை சேர்ந்த பத்ரிநாத், 2000-01 ரஞ்சி சீசனில் தமிழகத்துக்காக முதன்முறையாக களமிறங்கினார். இதுவரை, தமிழக ரஞ்சி அணியில் நம்பர்-1 பேட்ஸ்மேனாக தொடர்ந்து வருகிறார். முதல்தர கிரிக்கெட்டில் மொத்தம், 8778 ரன்கள் குவித்துள்ள பத்ரிநாத், 30 சதங்களுடன், 59.31 என்ற பேட்டிங் சராசரி வைத்துள்ளார்.
இந்திய அணிக்காக 2 டெஸ்ட் போட்டிகள், 7 ஒருநாள் போட்டிகள், ஓரு டி-20 போட்டிகளிலும் விளையாடியுள்ளார். ஐபிஎல் 20 ஓவர் கிரிக்கெட் போட்டித்தொடரில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காகவும் விளையாடியுள்ளார். இருப்பினும் சமீபகாலமாக இவர் புறக்கணிக்கப்படுவதாக உணர்கிறார். இதன்காரணமாக மகாராஷ்டிராவின் விதர்பா கிரிக்கெட் அணிக்காக விளையாட பத்ரிநாத் தீர்மானித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், "விதர்பா அணிக்காக விளையாட தேவைப்படும் நடைமுறைகளை செய்ய தொடங்கியுள்ளேன். இதற்காக, தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்திடமிருந்து தடையில்லா சான்றிதழ் பெற தேவைப்படும் நடவடிக்கைகளை தொடங்கியுள்ளேன். இதற்கு குறிப்பிட்டு சொல்லும்படியான எந்த காரணமும் இல்லை. அனைத்தும் உறுதியானபிறகு அனைவருக்கும் தெரியும்" என்றார்.
2014ம் ஆண்டு ஐபிஎல் ஏலத்தில் பத்ரிநாத்தை தேர்ந்தெடுக்காததும், தேசிய அளவில் நடைபெற்ற, சையது முஸ்தாக் அலி டிராபி டி-20 போட்டித்தொடருக்கான தமிழ்நாடு அணியில், பத்ரிநாத்தை புறக்கணித்ததும்தான் அவரது முடிவுக்கு காரணம் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. கர்நாடக ரஞ்சி வீரர் கணேஷ் சதீஷ், சமீபத்தில், விதர்பா அணிக்காக விளையாட ஒப்பந்தம் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.