டெல்லி: 22 வயதாகும் இந்திய டேபிள் டென்னிஸ் வீரர் சவும்யஜித் கோஷ் திருமணம் செய்து கொண்டார். நான்கு மாதங்களுக்கு முன் தன் மீது பாலியல் பலாத்கார புகார் கொடுத்த பெண்ணை அவர் திருமணம் செய்து கொண்டார்.
இந்திய டேபிள் டென்னிஸ் வீரரான சவும்யஜித் கோஷ், இரண்டு முறை இந்தியாவுக்காக ஒலிம்பிக்கில் விளையாடியுள்ளார். மிகவும் குறைந்த வயதில் தேசிய சாம்பியன் என்ற பெருமையையும் பெற்றவர்.
இந்தாண்டு மார்ச் மாதம் ஜெர்மனியில் நடந்த போட்டியில் அவர் விளையாடிக் கொண்டிருந்தார். அந்த நேரத்தில், திருமணம் செய்து கொள்வதாக பழகி பாலியல் பலாத்காரம் செய்துவிட்டார் என்று கோஷ் மீது, 18 வயது இளம்பெண் போலீசில் புகார் கொடுத்தார்.
இதனால் கடந்த நான்கு மாதங்களாக எந்தப் போட்டியிலும் அவர் பங்கேற்கவில்லை. ஆஸ்திரேலியாவில் நடந்த காமன்வெல்த் போட்டியில் அவர் பங்கேற்கவில்லை. அடுத்து இந்தோனேசியாவில் நடக்க உள்ள ஆசிய விளையாட்டுப் போட்டிக்கான அணியிலும் அவர் இடம்பெறவில்லை.
இந்த நிலையில், பாலியல் பலாத்காரம் செய்ததாக புகார் அளித்த அந்தப் பெண்ணை திருமணம் செய்து கொண்டுள்ளதாக சவும்யஜித் கோஷ் கூறியுள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது:
நானும் அந்தப் பெண்ணும் பழகினோம். அவர் மைனர் என்பதால் நான் ஏமாற்றிவிட்டதாகக் கூறினார்கள். எனக்கும் 22 வயதுதான் ஆகிறது. இந்த புகாரால் ஏற்பட்ட மன உளைச்சலால் எந்தப் போட்டியிலும் பங்கேற்கவில்லை. தற்போது உடல் எடை 10 கிலோ கூடியுள்ளது.
பழையதை நினைத்து புலம்புவதைவிட அடுத்து என்ன செய்ய வேண்டும் என்று யோசித்தேன். அந்தப் பெண்ணையே திருமணம் செய்து கொண்டேன்.
முக்கியமான போட்டிகளில் கலந்து கொள்ள முடியாமல் போய்விட்டது. ஒலிம்பிக் போட்டிதான் தற்போது என்னுடைய இலக்கு. இனி அதற்கான பயிற்சியில் ஈடுபட உள்ளேன் என்று கோஷ் கூறியுள்ளார்.