டெல்லி : குருகிராமை சேர்ந்த தேக்வாண்டோ வீராங்கனை சரிதா செவ்வாயன்று விடியற்காலையில் சுட்டுக் கொல்லப்பட்டார்.
அவரை சுட்டுக் கொன்ற நபர் சில காலமாக சரிதாவை திருமணம் செய்து கொள்ளுமாறு டார்ச்சர் செய்து வந்ததாகவும், அதற்கு தொடர்ந்து மறுப்பு தெரிவித்ததால் அவரை சுட்டுக் கொன்றதாகவும் முதற்கட்ட தகவல் கிடைத்துள்ளது.
சரிதாவை சுட்டுக் கொன்ற நபரும் ஒரு விளையாட்டு வீரர் என கூறப்படுகிறது. அவரது பெயர் சோம்பிர் சிங். அவர் பயிற்சியாளராக முயன்று வருவதாகவும், சில ஆண்டுகளுக்கு முன் சரிதாவை விளையாட்டு பயிற்சியாளர் ஆவதற்கான பயிற்சி முகாமில் சந்தித்ததாகவும் தெரிகிறது.
சில காலம் கழித்து இருவரும் நிச்சயதார்த்தம் செய்து கொண்டதாக தெரிகிறது. பின்னர், சில காரணங்களால் சரிதா திருமணம் செய்ய மறுத்ததாக கூறப்படுகிறது. அதனால், சோம்பிர் சிங் அவரை துரத்தத் தொடங்கி இருக்கிறார்.
கடந்த ஆகஸ்ட் மாதம் சோம்பிர்சிங் மீது பிலாஸ்பூர் காவல் நிலையத்தில் சரிதா புகார் அளித்துள்ளார். அந்த புகாரில் பாலியல் துன்புறுத்தல், தன்னை பின்தொடர்ந்து தொந்தரவு செய்தல் உள்ளிட்டவற்றை குறிப்பிட்டுள்ளார்.
பல மாதங்களாக தன்னையும், தன் குடும்பத்தினரையும் மிரட்டி வருவதாவும் கூறி இருக்கிறார். இந்த நிலையில், கடந்த செவ்வாய் அன்று இரவு ஒரு மணி அளவில் சரிதாவை சந்திக்க வந்துள்ளார் சோம்பிர்.
சுமார் 4.30 மணி அளவில் சரிதா சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளார். உடனடியாக காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு சரிதா சுட்டுக் கொலை செய்யப்பட்டதாக தகவல் கூறப்பட்டுள்ளது.
சரிதாவின் குடும்பத்தினர் சோம்பிர் சிங் தான் சரிதாவை சுட்டுக் கொன்றதாக புகார் கூறி உள்ளனர். காவல்துறை விசாரணை நடத்தி வருகிறது. சோம்பிர் சிங் தற்போது தலைமறைவாக இருப்பதாக தெரிய வந்துள்ளது.
குருகிராமில் போவா குருத் என்ற கிராமத்தை சேர்ந்த சரிதா தேக்வாண்டோவில் மாவட்ட அளவில் தங்கப் பதக்கம் வென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.