புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த தடகள வீரர், வீராங்கனையான லட்சுமணன் - சூர்யா திருமணம் நேற்று நடைபெற்றது.
இவர்கள் இருவரும் ஓட்டப்பந்தயத்தில் ஆசிய அளவிலான போட்டிகளில் தங்கம் வென்று சாதித்தவர்கள். ஜி.லட்சுமணன் 2017ஆம் ஆண்டு நடந்த ஆசிய தடகளப் போட்டியில் 5,000 மற்றும் 10,000 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் தங்கம் வென்றவர்.
அதன் பின்னும், உலக அளவில் பல்வேறு ஓட்டப்பந்தய போட்டிகளில் இந்தியா சார்பாக பங்கேற்று வருகிறார். இவர் இராணுவத்தில் பணியாற்றுகிறார்.
அதே புதுக்கோட்டை மாவட்டம் வசந்தபுரிநகரை சேர்ந்த சூர்யா என்ற தடகள வீராங்கனை தெற்காசிய விளையாட்டுப் போட்டியில் 5,000 மற்றும் 10,000 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் தங்கம் வென்று இருக்கிறார். இவர் இரயில்வேயில் பணி புரிந்து வருகிறார்.
சூர்யாவின் தந்தை லோகநாதன் தடகள பயிற்சியாளர். அவர் தான் லட்சுமணனுக்கு துவக்க காலத்தில் பயிற்சி அளித்துள்ளார். லட்சுமணன் - சூர்யா இருவரும் இணைந்து பயிற்சி, போட்டிகளில் பங்கேற்றுள்ளனர்.
அவர்களுக்கு இருவரின் வீட்டாரும் கலந்து பேசி திருமணம் செய்து வைக்க முடிவு செய்து, நேற்று புதுக்கோட்டையில் உள்ள அரியநாச்சியம்மன் கோவிலில் திருமணம் செய்து வைத்தனர்.
இந்த புதுமண தம்பதிக்கு தடகள அரங்கில் இருந்தும், பயிற்சியாளர்கள், நண்பர்கள் மற்றும் உறவினர்கள் மத்தியிலும் வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றன.