லண்டன்: காமன்வெல்த் வாள்வீச்சு போட்டிகளில் தமிழக வீராங்கனை பவானி தேவி தங்கம் வென்று சாதனை பிடித்துள்ளார். இது அவர் வெல்லும் 2வது பதக்கமாகும்.
வீரத்திற்கு பெயர் பெற்ற தமிழ்நாட்டில் வாள்வீச்சு என்பது பண்டைய காலத்து போர்க் கலையாகும்.
ஆனால், அதில் ஆண்களுக்கு நிகராக பெண்களும் சாதிக்க முடியும் என்று உலகிற்கு காட்டியவர் நமது தமிழக விராங்கனை பவானி தேவி.
கோகோ, பேட்மிண்டன் போன்ற விளையாட்டு தான் பெண்களுக்கு சரி வரும் என்று உருவாக்கப்பட்டுள்ள இமேஜை சுக்கு நூறாக உடைத்தார். முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா, கருணாநிதி ஆகியோர் பவானி தேவிக்கு தமிழக அரசு மூலம் பல்வேறு உதவிகளை செய்தனர்.
இதனால் சர்வதேச அளவில் பல்வேறு பதக்கங்களை குவித்த பவானி தேவி, ஒலிம்பிக் போட்டியில் வாள்வீச்சு பிரிவில் பங்கேற்ற முதல் வீராங்கனை என்ற சாதனையை படைத்தார். இந்த நிலையில், லண்டனில் நடைபெற்று வரும் காமன்வெல்த் வாள்வீச்சு போட்டியில் தமிழக வீராங்கனை பவானி தேவி பங்கேற்றார்.
இதில், 2வது சுற்றில் டேவிட் அலெக்சாண்ட்ராவை 15க்கு6 என்ற கணக்கில் வீழ்த்திய பவானி அரையிறுதியில் ஸ்காட்லாந்து வீராங்கனை லூசியை 15க்கு5 என்ற கணக்கில் வீழ்த்தினார். இதனைத் தொடர்ந்து இறுதிப் போட்டியில் பலம் வாய்ந்த ஆஸ்திரேலிய வீராங்கனை வெரினோக்காவை 15க்கு10 என்ற கணக்கில் வீழ்த்தி, 2வது முறையாக தங்கம் வென்று அசத்தி இருக்கிறார்.