பேஸ்புக் லைவ் சாட்டில் மேரி கோம்
இந்த சாட்டில் கலந்து கொண்டு மேரி கோம் பேசுகையில், எனது வெற்றிக்கு என்று ரகசியமாக எந்த மந்திரமும் இல்லை. இதற்காக நான் எதையும் விசேஷமாக கடைப்பிடிப்பதில்லை. கடினமாக உழைக்கிறேன். நேர்மையாக இருக்கிறேன். இதுதான் எனது மந்திரம். இப்படி இருந்தாலே போதும் வெற்றி தானாக வந்து சேரும். வேறு எதுவுமே செய்யத் தேவையில்லை. என்ன செய்தாலும் அதில் நேர்மையாக இருங்கள் போதும் என்றுள்ளார்.
ஏற்றத் தாழ்வுகள் வரத்தான் செய்யும்
வாழக்கையில் ஏற்றத் தாழ்வுகள் இருக்கத்தான் செய்யும். ஆனால் உங்களது கனவுகளை நீங்கள் அடைய வேண்டும். அதற்கான இலக்குகளில் உங்களது கவனம் இருக்க வேண்டும். அதிலிருந்து நீங்கள் விலகி விடக் கூடாது. எனது குத்துச் சண்டை பயணம் எளிதானதல்ல. தேசிய அளவில் உயருவதற்கும், சர்வதேச அளவில் போட்டியிடுவதற்கும், ஒலிம்பிக் வரை போவதற்கும் நிறைய முயற்சிகள் பயிற்சிகள் தேவை. அது சாதாரணமானதல்ல. ஆனால் உங்களிடம் வில் பவர் இருந்தால் நிச்சயம் சாதனை படைக்க முடியும் என்றும் கூறியுள்ளார்.
கஷ்டமான ஆரம்ப காலம்
எனது ஆரம்ப கால வாழ்க்கை கடினமானது. நான் ஏழைக் குடும்பத்திலிருந்து வந்தவள். வாழ்க்கை மிகக் கஷ்டமானதாக இருந்தது. அதை வார்த்தைகளில் விவரிக்க முடியாது. அதைப் பற்றி இப்போது நான் நினைக்கக் கூட விரும்பவில்லை என்று கூறினார் மேரி கோம். மேரி கோம் தற்போது ராஜ்யசபா எம்பியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.
வீட்டை விட்டு வராதீங்க
மேரி கோம் மேலும் கூறுகையில், யாரும் வீடுகளை விட்டு வெளியே வராதீர்கள். வீடுகளுக்குள்ளேயே இருங்கள். வீடுகளுக்குள் இருப்பது சிரமம்தான். ஆனால் அதைத் தவிர வேறு நல்ல வழி இப்போது இல்லை. வைரஸை வெல்ல அதுதான் ஒரே வழியும் கூட. உடம்பைப் பார்த்துக்கங்க. வீட்டுக்குள்ளேயே உடற்பயிற்சி செய்யலாம். அதை பின்பற்றுங்கள். அனைத்தும் நல்லபடியாக முடிந்தால் நாம் பயிற்சிக்குச் செல்ல முடியும். உங்களுக்கு வாழ்த்துகள்.. என்னையும் வாழ்த்துங்கள் என்று தெரிவித்துள்ளார்.