|
மொத்தமா முடங்கிப் போச்சே
விளையாட்டுத்துறை முற்றிலும் முடங்கிப் போயுள்ள நிலையில் வந்துள்ள இந்த விளையாட்டு தினம் யாரையும் மகிழ்ச்சிப்படுத்தவில்லை. மாறாக வருத்தத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்த தினத்தைக் கொண்டாட முடியாமல் விளையாட்டு வீரர்கள் ஏமாற்றத்தில் மூழ்கியுள்ளனர். அவர்களுக்கு ஆறுதல் தந்துள்ள கென்ய நாட்டு விளையாட்டுத்துறை அனைவரும் இந்த நாளில் உடல் ஆரோக்கியத்தைப் பேணுவதற்கு உறுதி எடுப்போம் என்று கூறியுள்ளது.
ஐபிஎல் போட்டிகள் இல்லை
இந்தியாவைப் பொறுத்தவரை இந்த மாதத்தில் ஐபிஎல் போட்டிகள் களை கட்டியிருக்கும். ஆனால் இந்த முறை அது நடக்காமல் போய் விட்டது. ஏப்ரல் 15ம் தேதி என்று சொல்லப்பட்டாலும் கூட அதற்கான வாய்ப்புகள் சுத்தமாக இல்லை என்பதே நிதர்சனம். எனவே கிரிக்கெட் வீரர்கள் பெரும் சோகத்தில் மூழ்கியுள்ளனர். இந்த ஆண்டு இறுதியில்தான் ஐபிஎல் போட்டிகள் நடக்க வாய்ப்புகள் அதிகம்.
இது டென்னிஸ் சோகம்
அதேபோல இந்த ஆண்டு விம்பிள்டன் போட்டிகள், பிரெஞ்சு ஓபன் ஆகியவை நடக்க முடியாமல் போய் விட்டது. அதேபோல அமெரிக்க ஓபன் போட்டியாவது நடக்குமா என்பதும் சந்தேகமே.. காரணம் அமெரிக்கா பெரும் பாதிப்பை சந்தித்து வருவதால். கொரோனாவிடம் சிக்கித் தவித்த விளையாட்டுப் போட்டிகளில் டென்னிஸும் ஒன்று.
பரிதாப கால்பந்து
அதேபோல உலக அளவில் அதிகம் பேர் விளையாடும் கால்பந்துப் போட்டிகளும் இந்த முறை பெரும் பாதிப்பை சந்தித்துள்ளன. ஐரோப்பிய நாடுகளில் கால்பந்துதான் அவர்களுக்கு ஆக்சிஜன் போல. அப்படிப்பட்ட விளையாட்டை விளையாட முடியாத நிலைக்கு அவர்கள் தள்ளப்பட்டுள்ளனர். ஸ்பெயின், இத்தாலி, பிரான்ஸ் என அனைத்து ஐரோப்பிய நாடுகளுமே கொரோனாவால் கடும் பாதிப்பை சந்தித்து திணறிக் கொண்டுள்ளன. அனைத்து போட்டிகளும் ரத்தாகி விட்டன.
ஸ்தம்பித்த விளையாட்டு உலகம்
இப்படி மொத்த விளையாட்டு உலகமும் ஸ்தம்பித்துப் போயுள்ள நிலையில் இன்று வந்துள்ள சர்வதேச விளையாட்டு தினம் நிச்சயம் அனைவருக்குமே பெரும் ஏமாற்றம்தான். இந்த நாளை மெளனமாக மட்டுமே கொண்டாட வேண்டிய நிலையில் விளையாட்டுத் துறையினர் உள்ளனர். இதுவரை இப்படிப்பட்ட ஒரு சோகம் விளையாட்டுத்துறைக்கு ஏற்பட்டதில்ல என்பது முக்கியமானது.