கடைசி நம்பிக்கை
டோக்கியோ ஒலிம்பிக் குத்துச்சண்டை போட்டியில் இந்தியாவின் மேரி கோம், சிம்ரன்ஜித் ஆகிய இரண்டு சீனியர் வீராங்கனைகளும் தோல்வியடைந்து வெளியேறினர். இதனால் குத்துச்சண்டையில் இந்தியாவுக்கு பதக்கம் கிடைக்குமா என்ற சந்தேகம் நிலவி வந்த சூழலில் அடியெடுத்து வைத்தார் இளம் வீராங்கனை லாவ்லினா.
அசாத்திய திறமை
லாவ்லினா போர்கோஹைன் அசாம் மாநிலத்தை சேர்ந்தவர். இவர் 2018, 2019 உலக பெண்கள் குத்துச்சண்டை சாம்பியன்ஷிப்பில் வெண்கல பதக்கம் வென்றார். இதன் மூலம் முதல்முறையாக ஒலிம்பிக்கிற்கும் தகுதி பெற்றார். தனது தொடக்க போட்டியிலேயே ஜெர்மனி வீராங்கனை நதின் அபேட்ஸை வீழ்த்தி வெற்றியுடன் ஒலிம்பிக் பயணத்தை தொடங்கினார்.
காலிறுதி
அடுத்தடுத்த சுற்றுகளில் வெற்றிகளை தன்வசம் ஆக்கிய லாவ்லினா காலிறுதிப்போட்டியில் சீன தைபே வீராங்கனை சின் தைனை எதிர்கொண்டார். இவரின் அட்டாக்கிங் கேமினால் 4:1 என்ற கணக்கில் எளிதாக வெற்றி பெற்று அரையிறுதி சுற்றுக்கு முன்னேறி அனைவருக்கும் ஆச்சரியமளித்தார். காலிறுதியில் வென்றதால் வெண்கலப்பதக்கமும் உறுதியானது.
அரையிறுதி
மிகுந்த எதிர்பார்ப்புகளுடன் லாவ்லினாவுக்கான அரையிறுதி போட்டி இன்று நடைபெற்றது. இந்த போட்டியில் அவர், துருக்கி வீராங்கனை புஸேனஸ் சுர்மனேலியை எதிர்கொண்டார். இந்த போட்டியிலும் லோவ்லினாதான் ஆதிக்கம் செலுத்த முயன்றார். ஆனால் துருக்கி வீராங்கனை புஸேனஸ் சுர்மனேலி தொடக்கத்திலேயே முந்திக்கொண்டதால் ஆட்டம் அவரின் பக்கம் சென்றது. இதனால் முதல் சுற்றை மிக எளிதாக சுர்மனேலி கைப்பற்றினார்.
வெண்கலப்பதக்கம்
இதன் பின்னர் மீண்டு வருவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அடுத்த 2 சுற்றுகளிலுமே துருக்கி வீராங்கனையின் கையே ஓங்கி இருந்தது. இதனால் மொத்தமாக துருக்கி வீராங்கனை புஸேனஸ் சுர்மனேலியை 5:0 என்ற புள்ளி கணக்கில் லோவ்லினாவை வீழ்த்தி வெற்றி பெற்றார். எனினும் லாவ்லினாவுக்கு வெண்கலப்பதக்கம் கிடைத்தது.
மன வருத்தம்
தோல்வி குறித்து பேசிய லாவ்லினா, தங்கப்பதக்கத்திற்காக கடுமையாக உழைத்தேன். தற்போது கொஞ்சம் மன வருத்தமாக உள்ளது. சுன்மனேலியிடம் எனது வியூகம் ஏதும் எடுபடவில்லை. அவர் மிக பலமாக இருந்தார். பேக் ஃபுட் வைத்து ஆடினால் அடிபடுவேன் என நினைத்து முன்னோக்கி ஆடினேன் ஆனால் அது பலிக்கவில்லை. அவரின் நம்பிக்கையை உடைக்க நான் கடுமையான பஞ்ச்-களை கொடுத்தேன். ஆனால் அவர் எதற்குமே அசரவில்லை.
8 வருட போராட்டம்
எனக்கு எப்போதுமே ஒலிம்பிக்கில் கலந்துக்கொண்டு பதக்கம் வெல்ல வேண்டும் என்ற ஆசை இருந்தது. தற்போது அது நிறைவேறியுள்ளது. ஆனால் நான் இன்னும் நிறைய பெற வேண்டும். இந்த வெண்கலப்பதக்கத்திற்காக கடந்த 8 வருடங்கள் கடுமையாக போராடியுள்ளேன். வீட்டிற்கு சரியாக செல்லவில்லை, குடும்பத்தினருடன் இருக்க முடியவில்லை, எனக்கு பிடித்த உணவுகளை உண்ணவில்லை. எனது ஆட்டத்திற்காக மிகுந்த கவனத்துடன் இருப்பேன் எனக்கூறியுள்ளார்.