இளம் வீராங்கனை
தகுதிச்சுற்று போட்டிகளில் தொடர் அதிரடிகளை காட்டி வந்த லோவ்லினா காலிறுதிப்போட்டியில் ஆக்ரோஷத்தை தொடர்ந்தார். நேற்று முந்தினம் நடைபெற்ற மகளிர் குத்துச் சண்டை 69 கிலோ எடைப் பிரிவு, காலிறுதிப் போட்டியில் முன்னாள் சாம்பியன் சீனா தைபே வீராங்கனை சின்-நியென் சென்-ஐ எதிர்த்து லாவ்லினா போட்டியிட்டார்.
காலிறுதி
விறுவிறுப்பாக நடைபெற்ற இப்போட்டியில் முன்னாள் சாம்பியன் சின்-நியெனை 4-1 என்ற கணக்கில் லவ்லினா வீழ்த்தி அசத்தினார். இதன்மூலம், அவர் அரையிறுதிப் போட்டிக்கு முன்னேறி, பதக்கம் வெல்லும் வாய்ப்பை உறுதிப்படுத்தியுள்ளார். 69 கிலோ எடைப் பிரிவின் அரையிறுதிச் சுற்றில் இந்தியாவின் லாவ்லினா, துருக்கியின் சுர்மினிலி ஆகியோர் மோதவுள்ளனர். இப்போட்டி, வரும் ஆகஸ்ட் 4ஆம் தேதி காலை 11 மணிக்குத் துவங்கவுள்ளது. இப்போட்டியில் லாவ்லினா தோல்வியடையும் பட்சத்தில் வெண்கலம் வெல்வார். வெற்றிபெற்றால், தங்கம் அல்லது வெள்ளி வெல்லும் வாய்ப்பு கிடைக்கும்.
உறுதியான 3வது பதக்கம்
டோக்கியோ ஒலிம்பிக் பதக்கத்தை உறுதிசெய்துள்ள லாவ்லினாவை நினைத்து நாட்டு மக்கள் அனைவரும் தற்போது புகழ்ந்து வரும் சூழலில் அவரின் கடந்த கால வாழ்க்கை எவ்வளவு மோசமாக இருந்தது என்பதையும் பார்க்க வேண்டும். லாவ்லினாவின் வாழ்க்கையில் அவ்வளவாக மகிழ்ச்சியில்லை. மிக வறுமையில் சிக்கி தவித்து வந்தது தான் லாவ்லினாவின் குடும்பம். இந்த கஷ்டங்களை எல்லாம் தாங்கிதான், இன்று லாவ்லினா சாதித்துள்ளார். லாவ்லினாவினால் அவரது குடும்பம் மட்டுமின்றி அவரின் கிராமமும் தற்போது புத்துயிர் பெற்றுள்ளது.
புத்துயிர் பெரும் கிராமம்
அசாம் மாநிலம் கோல்காட் மாவட்டத்தில் உள்ள பரோமுதியா கிராமத்தை சேர்ந்தவர் லாவ்லினா. பரோமுதியா கிராமத்தில் இருந்து லாவ்லினாவின் வீட்டிற்கு செல்ல சாலை வசதி இல்லை. சரியான சூழல் இல்லாததால் அதிகாரிகள் சாலை போட மறுத்து வந்துள்ளனர். இந்நிலையில் அவர் டோக்கியோ ஒலிம்பிக்கில் பதக்கம் உறுதி செய்தவுடன் லாவ்லியாவின் வீட்டிற்கு சாலைகள் போடப்பட்டு வருகிறது.
புதுப்பிக்கப்படும் சாலை
கிராமத்தில் இருந்து லாவ்லியாவின் வீட்டிற்கு செல்லும் 3.5 கிமீ தூரம் கொண்ட சாலையினை அதிகாரிகள் நேரடியாக இருந்து சாலை போடுவதை கண்காணித்து வருகின்றனர். லாவ்லினா பதக்கம் வென்று வீடு திரும்புவதற்காக இந்த பணிகள் நடைபெற்று வருகிறது.
பரிசு
இதுகுறித்து பேசியுள்ள அந்த தொகுதி எம்.எல்.ஏ பிஸ்வாஜித் புகான், பதக்கம் வென்று வரும் லாவ்லினாவுக்கு இதை பரிசாக கொடுக்கவிருக்கிறோம் என்று கூறலாம். அசாம் மாநில மக்கள் லாவ்லினா தங்கப்பதக்கம் வெல்ல பிரார்த்தனை செய்யுங்கள். இளம் தலைமுறையினருக்கு லாவ்லினா ஒரு எடுத்துக்காட்டாக மாறியுள்ளார். இந்த தொகுதியில் விளையாட்டு துறை மேம்படுத்த நடவடிக்கைகள் ஏற்படுத்தப்படும். அதற்கு முதல்வர் ஒத்துழைப்பு வழங்குவார் என நினைக்கிறேன் எனக்கூறியுள்ளார்.