ஒலிம்பிக் பதக்கம்
49 கிலோ எடை பிரிவில் பங்கேற்ற அவர், ஸ்நாட்ச் பிரிவில் இவர் 87 கிலோவும் க்ளீன் அண்டு ஜெர்க் முறையில் 115 கிலோ தூக்கி அசத்தினார். இதன் மூலம் மொத்தமாக 202 கிலோ எடையை தூக்கி வெள்ளிப்பதக்கம் வென்றார். டோக்கியோ ஒலிம்பிக்கில் இந்தியாவுக்கு கிடைத்த முதல் பதக்கம் இதுவாகும். இதுமட்டுமல்லாமல் ஒலிம்பிக் வரலாற்றில் பளு தூக்குதல் போட்டியில் இந்தியா பெறும் 2வது பதக்கம் இதுவாகும். இதற்கு முன்னர் கடந்த 2010ம் ஆண்டு நடைபெற்ற ஒலிம்பிக்கில் கர்ணம் மல்லீஸ்வரி வெங்கல பதக்கம் பெற்றிருந்தார்.
பெருமை
தனது முதல் ஒலிம்பிக் பதக்கம் குறித்து பேசியுள்ள மீராபாய் சானு , எனக்கு மிக மகிழ்ச்சியாக உள்ளது. இந்த நிகழ்வுக்காக கடந்த 5 ஆண்டுகளாக காத்துக்கொண்டிருந்தேன். என்னை நினைத்து நானே பெருமை கொள்கிறேன். தங்கப் பதக்கத்திற்காக நான் முயற்சித்தேன். எனினும் வெள்ளிப்பதக்கம் வென்றதே மிகப்பெரும் சாதனையாக கருதுகிறேன் எனக்கூறியுள்ளார்.
அந்த வார்த்தை
இந்தியாவுக்காக முதல் பதக்கம் வென்று கொடுத்தது மகிழ்ச்சி அளிக்கிறது. நான் மணிப்பூரை பகுதியை சேர்ந்தவள் மட்டும் அல்ல. நான் ஒட்டுமொத்த நாட்டிற்கும் சொந்தமானவள். மீரா பாய் சானுவின் இந்த ஒற்றை வார்த்தை ஒட்டுமொத்த ரசிகர்களின் மனதையும் வென்றுள்ளது. இதனை சமூக வலைதளங்களில் பதிவிட்டு புகழ்ந்து வருகின்றனர்.
பிரதமர் மோடி புகழாரம்
இதுகுறித்து பிரதமர் மோடி, மீராபாய்க்கு வாழ்த்து தெரிவித்து ட்வீட் செய்துள்ளார். அதில், இதைவிட ஒரு மகிழ்ச்சியான தொடக்கம் இருக்க முடியாது என்று பிரதமர் தெரிவித்துள்ளார். மீராபாய் சானுவின் பதக்கத்தால் இந்தியா மகிழ்ச்சி அடைந்துள்ளது என்றும் குறிப்பிட்டுள்ளார்.