இளவேனில் வாலறிவன்
துப்பாக்கி சுடுதலில் இந்தியா 15 பேர் கொண்ட ஸ்ட்ராங்கான அணியை அனுப்பியது. இந்நிலையில், இன்று காலை நடைபெற்ற 10 மீட்டர் ஏர் ரைஃபிளில் இந்திய வீராங்கனைகள் அபூர்வி சண்டிலா, இளவேனில் வாலறிவன் ஆகியோர் களமிறங்கினார்கள். இளவேனில் பற்றி சொல்ல வேண்டியதில்லை. குஜராத்தில் வசிக்கும் தமிழகத்தை சேர்ந்த 21 வயதான இளவேனில், உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதலில் 2 முறை தங்கம் வென்றவர். 'நம்பர் ஒன்' வீராங்கனையாக வலம் வந்த இளவேனில், நிச்சயம் பதக்கம் வெல்வார் என்று எதிர்பார்க்கப்பட்டது.
626.5 புள்ளிகள்
ஆனால், ஆரம்பம் முதலே இளவேனில் இன்று தடுமாறினார். முதல் இரண்டு சுற்றில் சுமாரான ஆட்டத்தை வெளிப்படுத்திய இளவேனில், மூன்றாவது சுற்றில் ஓரளவுக்கு நம்பிக்கு அளிக்கும் புள்ளிகளை பெற்றார். ஆனால், மீண்டும் அவரால் மீண்டு வர முடியவில்லை. முடிவில் 104.3, 104.0, 106.0, 104.2, 103.5, 104.5 என்ற புள்ளிகள் பெற்று, மொத்தம் 626.5 புள்ளிகள் எடுத்தார்.
621.9 புள்ளிகள்
இளவேனில் பரவாயில்லை என்பது போல் இருந்தது அபூர்வி சண்டிலாவின் ஆட்டம். 104.5, 102.5, 104.9, 104.2, 102.2, 103.6 பாயிண்ட்கள் பெற்று மொத்தம் 621.9 புள்ளிகள் எடுத்தார். இதனால், இளவேனில் - அபூர்வி ஆகியோர் 10 மீட்டர் ஏர் ரைஃபிள் பிரிவில் இறுதிப் போட்டிக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்தனர். இந்த பிரிவில், டாப்-8 வீராங்கனைகள் இறுதிப்போட்டிக்கு முன்னேறுவார்கள். இறுதி சுற்று இந்திய நேரப்படி காலை 7.15 மணிக்கு நடக்கிறது.
மெடல் கிடைக்குமா?
ஆண்களுக்கான 10 மீட்டர் ஏர் பிஸ்டலில் இந்திய வீரர்கள் அபிஷேக் வர்மா, சவுரப் சவுத்ரி இன்று களமிறங்குகின்றனர். அபிஷேக் வர்மா 2019-ம் ஆண்டு உலக துப்பாக்கி சுடுதலில் தங்கப்பதக்கம் வென்றவர். 19 வயதான உத்தரபிரதேசத்தை சேர்ந்த சவுரப் சவுத்ரி ஆசிய விளையாட்டில் தங்கப்பதக்கம் வென்றவர் என்பதால், இவர்கள் இருவர் மீதும் பெரும் எதிர்பார்ப்பு உள்ளது.