பதக்கம் வென்ற மீராபாய்
49 கிலோ எடை பிரிவில் பங்கேற்ற மீரா பாய், ஒட்டுமொத்தமாக 202 கிலோ எடையை தூக்கி அசத்தினார். இதனால் வெள்ளிப்பதக்கம் வென்று இந்தியாவின் பதக்க பட்டியலை தொடங்கி வைத்துள்ளார். இவருக்கு பிரதமர் நரேந்திர மோடி, குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் உட்பட இந்தியர்கள் பலரும் வாழ்த்து கூறி வருகின்றனர்.
பயிற்சியாளருக்கு பரிசுத்தொகை
இந்நிலையில் மீரா பாய்க்கு பயிற்சி அளித்த விஜய் சர்மாவுக்கு பரிசுத்தொகை வழங்கப்படவுள்ளது. டோக்கியோ ஒலிம்பிக்கில் வீரர், வீராங்கனைகள் யாரேனும் தங்கம் வென்றால் அவர்களின் பயிற்சியாளர்களுக்கு ரூ.12.5 லட்சம் பரிசுத்தொகை வழங்கப்படும் என இந்திய ஒலிம்பிக் கமிட்டி அறிவித்திருந்தது. வெள்ளிப்பதக்கம் வென்றால் ரூ.10 லட்சமும், வெங்கல பதக்கம் வென்றால் ரூ. 7.5 லட்சமும் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. அந்தவகையில் வெள்ளிப்பதக்கம் வென்ற மீரா பாய்-ன் பயிற்சியாளர் விஜய் சர்மாவுக்கு ரூ.10 லட்சம் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஐஓசி விளக்கம்
இதுகுறித்து பேசியிருந்த இந்திய ஒலிம்பிக் கமிட்டி அதிகாரி, ராஜீவ் மேஹ்தா, ஒலிம்பிக்கில் வெற்றியாளர்களை உருவாக்கும் பயிற்சியாளர்களுக்கும் பரிசுத்தொகை வழங்கப்படவேண்டும். வீரர், வீராங்கனைகளுடன் சேர்ந்து தினந்தோறும் பயிற்சியாளர்களும் கடுமையாக உழைத்து வருகின்றனர். தியாகங்களை செய்கின்றனர். எனவே அவர்களுக்கும் பரிசுத்தொகை வழங்கப்படும் எனக்கூறினார்.
வீரர், வீராங்கனைகளுக்கு பரிசு
பயிற்சியாளர்கள் மட்டுமல்லாது பதக்கம் வெல்லும் வீரர், வீராங்கனைகளுக்கும் இந்திய ஒலிம்பிக் கமிட்டி பரிசுத்தொகை அறிவித்துள்ளது. அதன்படி தங்கம் வெல்பவர்களுக்கு ரூ.75 லட்சமும், வெள்ளி வெல்பவர்களுக்கு ரூ.50 லட்சமும், வெங்கலம் வெல்பவர்களுக்கு ரூ.25 லட்சமும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதுமட்டுமல்லாமல், இந்தியாவுக்காக ஒலிம்பிக்கில் கலந்துக்கொண்டுள்ள ஒவ்வொரு வீரர்களுக்கும் ரூ.1 லட்சம் ஊக்கத்தொகை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.