ஜப்பான்: ஒலிம்பிக் போட்டியின் போது விளையாட்டு துறை அதிகாரி ஒருவர் 'ரேசிசம்' கருத்தை தெரிவித்தது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
டோக்கியோவில் கடந்த ஜுலை 23ம் தேதி தொடங்கிய ஒலிம்பிக் போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.
இதில் ஏற்கனவே கொரோனா, ஊக்க மருந்து சர்ச்சை என பல்வேறு பிரச்னைகள் ஓடி வரும் நிலையில் தற்போது புது பூகம்பம் எழுந்துள்ளது.
ஒலிம்பிக் தொடரில் சமீபத்தில் ஆண்களுக்கான சைக்கிளிங் போட்டி நடைபெற்றது. டைம் ட்ரையல் பிரிவாக நடத்தப்பட்ட இந்த போட்டியில் பல்வேறு நாடுகளை சேர்ந்த வீரர்கள் ஒருவரை ஒருவர் முந்திச்செல்ல முயன்றனர். அப்போது ஜெர்மணி நாட்டை சேர்ந்த நிகியாஸ் என்ற வீரர், அல்கெரியா மற்றும் எரிட்ரியா நாடுகளை சேர்ந்த வீரர்களை முந்திச்செல்ல கடுமையாக முயன்றுவந்தார். அப்போது அங்கிருந்த ஜெர்மணி நாட்டு சைக்ளிங் அமைப்பின் இயக்குநர் பாட்ரிக் மாஸ்டர் 'ரேசிச' கருத்தை முன்வைத்து கூச்சலிட்டார்.
'ஏய் சீக்கிரம் போ, அந்த ஒட்டகம் மேய்க்கும் பசங்கள பிடி, சீக்கிரம் போ' எனக்கூச்சலிட்டார். விளையாட்டு வீரர்களை ஒட்டகம் மேய்ப்பவர்கள் என அநாகரீகமாக கூறிய அந்த ஆடியோ இணையத்தில் வெளியாகி சர்ச்சையை கிளப்பியது. ஒலிம்பிக் போன்ற விளையாட்டு திருவிழாக்களிலும் ரேசிசமா என மக்கள் கண்டனங்களை தெரிவித்தனர்.
இந்த பிரச்னை பூதாகரமாக வெடிக்க, ஜெர்மன் நாட்டு தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பகிரங்க மன்னிப்பை கேட்டார். அப்போது பேசிய அவர் நான் அப்போது உற்சாகப்படுத்தும் எண்ணத்திலேயே இருந்துவிட்டேன். எனக்கு கடும் அழுத்தங்கள் இருந்தன. அப்படிபட்ட தருணத்தில் அநாகரீகமான வார்த்தைகள் தெரியாமல் வந்துவிட்டன. அதற்காக நான் மனம் வருந்தி மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். யாரையும் காயப்படுத்த நான் அப்படி கூறவில்லை எனத்தெரிவித்தார். எனினும் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என ரசிகர்கள் முறையிட்டு வருகின்றனர்.