வெண்கலப்பதக்க போட்டி
இன்று இந்திய மகளிர் ஹாக்கி அணி, வெண்கலப் பதக்கத்திற்கான போட்டியில் மோதியது. இந்த போட்டியில் கிரேட் பிரிட்டன் அணியை இந்திய பெண்கள் ஹாக்கி அணி எதிர்கொண்டது. இந்த போட்டியில் தொடக்கமே கிரேட் பிரிட்டன் அணிக்கு சாதகமாக அமைந்தது. ஆட்டம் தொடங்கிய சில நிமிடங்களில் பிரிட்டன் அணி முதல் கோல் போட்டது. இந்தியாவின் தீப் கிரேஸ் செய்த தவறால் "செல்ப் கோல்" விழுந்தது.
ஏமாற்றம்
அதன்பின் தொடர் ஆக்ரோஷத்தை காட்டிய பிரிட்டன் அணி 23வது நிமிடத்தில் இரண்டாவது கோல் போட்டது. இதனால் 2 - 0 என முன்னிலை பெற்றது. இதன்பின்தான் இந்திய பெண்கள் அணி சிறப்பான கம்பேக் கொடுத்து அடுத்தடுத்து 3 கோல்களை போட்டது. கடைசி வரை பரபரப்பாக சென்ற இந்த ஆட்டத்தில் இறுதியில் ஜெர்மனி அணி 4 - 3 என்ற கோல்கணக்கில் வெற்றி பெற்று வெண்கலப்பதக்கத்தை தட்டிச்சென்றது.
தோற்றாலும் பரிசு
ஒலிம்பிக்கில் பங்குபெற்றுள்ள இந்திய வீரர்,வீராங்கனைகள் பதக்கம் வென்றால் பரிசுத்தொகை வழங்கப்படும் என பல்வேறு மாநில அரசுகள் அறிவித்திருந்தன. இந்நிலையில் வெண்கலப்பதக்கத்திற்கான போட்டியிலும் தோல்வியடைந்த வீராங்கனைகளுக்கு ஹரியானா மாநில அரசு பரிசுத்தொகை அளித்து ஊக்குவித்துள்ளது.
பரிசுத்தொகை அறிவிப்பு
இதுகுறித்து அறிவிப்பு வெளியிட்டுள்ள ஹரியானா முதல்வர் மனோகர் லால், ஒலிம்பிக்கில் இந்திய ஹாக்கி அணியில் இடம்பெற்றுள்ள 9 ஹரியானா வீராங்கனைகளுக்கு தலா ரூ.50 லட்சம் பரிசுத்தொகை வழங்கப்படுவதாக தெரிவித்துள்ளார். இந்திய அணியில், கேப்டன் ராணி ராம்பால், நவ்ஜோத் கௌர், சவிதா புனியா, நேஹா கோயல், மோனிகா மாலிக், நவ்னீத் கௌர், நிஷா, ஷர்மிளா தேவி, உதிதா ஆகியோர் ஹரியானாவை சேர்ந்தவர்கள் ஆகும்.
வீரர்கள் 2 பேர்
இதுமட்டுமல்லாமல் ஒலிம்பிக்கில் வெண்கலம் வென்ற ஹாக்கி அணியில் இடம்பெற்ற 2 ஹரியானா வீரர்களுக்கும் பரிசுத்தொகை அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே அறிவித்தபடி அவர்களுக்கு தலா ரூ.2.5 கோடி வழங்க முதல்வர் மனோகர் லால் உத்தரவிட்டுள்ளார். இத்துடன் சேர்த்து அவர்களுக்கு அரசுப்பணி, குறைந்த விலையில் காலி வீட்டுமனையும் வழங்கப்படவுள்ளது.
ரவி தஹியா
இதே போல மல்யுத்த போட்டியில் வெள்ளிப்பதக்கம் வென்றுள்ள ரவிக்குமார் தஹியாவுக்கும் பரிசுத்தொகை அறிவித்துள்ளது ஹரியானா அரசு. ரவிக்குமார் ஹரியானாவை சேர்ந்தவர் ஆகும். எனவே அம்மாநில அரசு ஏற்கனவே அறிவித்தபடி ரவிக்குமார் தஹியாவுக்கு ரூ.4 கோடி பரிசுத்தொகை வழங்கவுள்ளது. இதே போல அவருக்கு முதல் தர அரசுப்பணி, ஹரியானாவில் காலி வீட்டுமனையும் குறைந்த விலையில் தரப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுமட்டுமல்லமால் ரவிக்குமாரின் கிராமத்திற்கு அருகில் மல்யுத்தத்திற்கான ஸ்டேடியம் ஒன்றும் கட்டப்படும் என அறிவித்துள்ளது.