அரையிறுதி ஆட்டம்
இந்திய ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஹாக்கி ஆண்கள் அரையிறுதிப்போட்டி இன்று நடைபெற்றது. இந்தப் போட்டியில் இந்திய ஆடவர் அணி பெல்ஜியம் அணியை எதிர்த்து மோதியது. விறுவிறுப்பாக நடைபெற்ற ஆட்டத்தில் இந்தியாவுக்கு தோல்வியே மிஞ்சியது. கடைசி வரை கோல் அடித்து வெற்றி பெற்றுவிடுவோம் என இந்திய வீரர்கள் கடுமையாக போராடியது ரசிகர்களிடையே பாராட்டுக்களை பெற்று வருகிறது.
தொடக்கம் எப்படி
இந்த ஹாக்கி போட்டியில் தொடக்கத்தில் இருந்தே விறுவிறுப்புக்கு பஞ்சம் இன்றி சென்றது. இரண்டு அணிகளுமே விட்டுக்கொடுக்காமல் சம பலத்தை காட்டி வந்ததால் ஆட்டத்தில் பரபரப்பு தொற்றிக்கொண்டது. எனினும் ஆட்டத்தின் முதல் சில நிமிடங்களிலேயே இந்திய அணி அடுத்தடுத்து 2 கோல்களை அடித்து முன்னிலை பெற்றது.
வெற்றி
ஆனால் 2வது கோலில் இருந்து ஆட்டம் பெல்ஜியம் அணியின் பக்கம் திரும்பியது. இந்தியாவுக்கு எதிராக திணறி வந்த அந்த அணி திடீரென கம்பேக் கொடுத்தது. இந்திய அணி தடுப்பாட்டத்தில் அதிக கவனம் செலுத்திய நிலையில் பெல்ஜியம் அணியினர் கிடைக்கும் கேப்பில் கோல்களை அடித்து தள்ளினர். இதனால் தொடர்ச்சியாக அவர்களுக்கு கோல் மழை பொழிந்தது. அதற்கேற்றார் போல இந்திய வீரர்கள் பெனால்டி வாய்ப்புகளை வாரிகொடுத்ததால், கோல் அடிக்க பெல்ஜியம் அணிக்கு எளிதாக இருந்தது. இறுதியில் 5 - 3 என்ற கணக்கில் இந்திய அணி தோல்வியை சந்தித்தது.
ரசிகர்கள் ஏமாற்றம்
ஒலிம்பிக்கின் 4 லீக் போட்டிகளில் 3 வெற்றிகள் மற்றும் காலிறுதிப்போட்டியில் அபார வெற்றி என பெரும் எதிர்பார்ப்புடன் களமிறங்கியது ஹாக்கி அணி. ஆனால் தோல்வியை சந்தித்தது ரசிகர்களிடையே பெரும் ஏமாற்றத்தை கொடுத்தது. எனினும் அவர்கள் அடுத்த போட்டியில் வெற்றி பெற வேண்டும் என வாழ்த்தி வருகின்றனர்.
கேப்டன் மன்ப்ரீத்
இந்நிலையில் இந்த தோல்வி குறித்து பேசியுள்ள அணியின் கேப்டன் மன்ப்ரீத் சிங், எனக்கு தற்போது மிகவும் வருத்தமாக உள்ளது. நாங்கள் வெற்றிப்பெற்று விடுவோம் என்ற மனநிலையுடன் போட்டியை தொடங்கினோம். ஆனால் அது பொய்யாக போனதை நினைக்கும் போது ஏற்றுக்கொள்ள கடினமாக இருக்கிறது. அடுத்ததாக நாங்கள் வெண்கலப்பதக்கத்திற்கான போட்டிக்காக கவனம் செலுத்த வேண்டும். அந்த பதக்கத்தை வெல்ல கடினமாக உழைப்போம்.
கவனத்துடன் செயல்படுவோம்
நீண்ட வருடங்களுக்கு பிறகு அரையிறுதிப்போட்டி வரை வந்ததை நினைத்து பெருமை கொள்கிறோம். ஆனால் தற்போது மிகுந்த கவனத்துடன் செயல்பட வேண்டும். ஏனென்றால் அடுத்த போட்டி எங்களுக்கு மிகவும் முக்கியமானது. குறைந்தது வெண்கலப்பதக்கத்தையாவது தாய் நாட்டிற்கு பெற்றுக்கொடுக்க வேண்டும்.
ஒரே அணி
இந்திய அணியில் எப்போதுமே ஒற்றுமையும், கடின உழைப்பும் அதிகமாகவே இருக்கும். தற்போது இருக்கும் அணி தான் இந்தியாவுக்காக கடந்த 4 - 5 வருடங்களாக ஆடி வருகிறது. இந்த கட்டத்தை எட்ட நாங்கள் மிகுந்த கஷ்டங்களை சந்தித்து இருக்கிறோம். நாங்கள் இன்னும் சிறப்பான வெற்றியை பெற வேண்டும். ஆனால் துரதிஷ்டவசமாக இன்று அது நடைபெறவில்லை.
நேரம் கிடையாது
இன்றைய முடிவை நினைத்து வருத்தமாக தான் இருக்கிறது. ஆனால் அது குறித்து மனம் வருந்துவதற்கெல்லாம் தற்போது நேரம் இல்லை. அரையிறுதிப்போட்டியை முற்றிலுமாக மறந்துவிட்டு, எதிர்காலத்தை நினைத்து பயிற்சியை மேற்கொள்ள வேண்டும். தற்போது கூட எங்களுக்கு பதக்கம் வெல்ல வாய்ப்பு இருக்கிறது. நாங்கள் அழுது கொண்டிருப்பதை விட அந்த பதக்கத்தை எப்படி வெல்லலாம் என யோசிப்பதே முதன்மையானதாக இருக்கிறது.
வாழ்த்துக்கள்
அரையிறுதியில் இந்திய அணி தோல்வியடைந்த போதும் அவர்கள் அடுத்த போட்டியில் வெல்வதற்காக ட்விட்டரில் பிரதமர் மோடி ஊக்குவித்தார். ட்விட்டரில் அவர், வெற்றியும், தோல்வியும் வாழ்வில் சகஜமான ஒன்று. டோக்கியோ ஒலிம்பிக்கில் நமது இந்திய அணி முழுமையான திறமையையும் வெளிப்படுத்தியது. அவர்களின் அடுத்த போட்டிக்கு வாழ்த்துக்கள். ஹாக்கி வீரர்களை நினைத்து இந்தியா பெருமைக்கொள்கிறது என தெரிவித்துள்ளார்.
திடீர் அழைப்பு
இதுமட்டுமல்லாமல், போட்டி முடிந்தவுடனேயே இந்திய அணி கேப்டன் மண்ப்ரீத் சிங்கிற்கு, பிரதமர் மோடி தொலைப்பேசியில் தொடர்பு கொண்டு பேசியுள்ளார், அப்போது, அரையிறுதிப்போட்டி குறித்து பாராட்டுகளை தெரிவித்ததாகவும், அட்டம் முழுவதும் சிறப்பாக ஆடியதாகவும் பாராட்டியுள்ளார். இதே போல அடுத்து நடக்கவிருக்கும் போட்டிக்கு தனது வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.
அடுத்த சுற்று
ஒலிம்பிக் ஹாக்கி தொடரின் அரையிறுதிப்போட்டியில் தோல்வி அடைந்ததால் இந்திய ஆண்கள் ஹாக்கி அணி அடுத்ததாக வெண்கல பதக்கத்திற்கான போட்டியில் ஆகஸ்ட் 5ம் தேதி ஆட வேண்டும். இந்த போட்டியில் இந்திய அணி எதிர்கொள்ள போகும் அணி எது என்று இன்னும் உறுதி செய்யப்படவில்லை. ஆஸ்திரேலியா அல்லது ஜெர்மனியை இதில் இந்தியா எதிர்கொள்ளும். ஆஸி vs ஜெர்மனி இடையிலான செமி பைனல் போட்டி நாளை நடக்க உள்ளது. இதில் தோல்வி அடையும் அணி இந்தியாவை எதிர்கொள்ளும். 41 ஆண்டுகளாக ஒலிம்பிக்கில் எந்த பதக்கமும் வெல்லாமல் இருக்கும் இந்திய அணி, இந்த முறை வெண்கலப்பதக்கம் வெல்லுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.