வெண்கலப்பதக்க போட்டி
விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த போட்டியில் இந்திய அணி அபாரமாக விளையாடி வெற்றிபெற்றது. ஜெர்மனியை இந்திய ஹாக்கி அணி 5:4 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி வெற்றிபெற்றுள்ளது. அரையிறுதிப்போட்டியில் தோல்வியடைந்திருந்தாலும், பெரும் மன உறுதியுடன் இந்திய அணி, ஜெர்மணியை புரட்டிப்போட்டது இந்திய ரசிகர்கள் அனைவருக்கும் பூரிப்பை ஏற்படுத்தியது.
ஆரம்பமே பரபரப்பு
வழக்கமாக ஆட்டத்தின் கடைசி சில நிமிடங்களில் தான் உச்சக்கட்ட பரபரப்பு இருக்கும். ஆனால் இன்றைய போட்டியில் அதற்கு அப்படியே மாற்றாக தொடக்கம் முதலே பரபரப்பு தொற்றிக்கொண்டது. ஆட்டத்தின் தொடக்கத்திலேயே ஜெர்மனி அணி ஆதிக்கம் செலுத்தியது. ஆட்டத்தின் 2வது நிமிடத்திலேயே அந்த அணி முதல் கோல் போட்டு முன்னிலை பெற்றது. அதன்பின்னர் ஆட்டத்தின் 16வது நிமிடத்தில் தான் இந்தியா தனது முழு வேகத்திற்கு திரும்பியது. போட்டி தொடங்கி 16 நிமிடங்கள் கழித்து தான் இந்தியா முதல் கோல் போட்டது.
இந்தியா வெற்றி
பின்னர் சுதாரித்துக்கொண்ட ஜெர்மணி அணி அடுத்தடுத்து 2 கோல்களை அடித்து 3 : 1 என்ற வலுவான நிலைக்கு சென்றது. இதன்பின் ஆட்டத்தில் விறுவிறுப்பு கூடியது. இரு அணிகளும் மாறி மாறி கோல் மழை பொழிய எந்த திசையில் இருந்து கோல் போகும் என்று தெரியாத அளவிற்கு சென்றது. இறுதியில் இந்திய அணி 5: 4 என்ற கணக்கில் த்ரில் வெற்றி பெற்றது.
பிரதமர் வாழ்த்து
41 ஆண்டுகள் கழித்து இந்திய ஹாக்கி அணி கோப்பையை வென்றதற்கு இந்திய முழுவதும் இருந்து வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது. இதுகுறித்து ட்வீட் செய்துள்ள இந்திய பிரதமர் நரேந்திர மோடி, வரலாறு படைக்கப்பட்டது! இந்தியர் ஒவ்வொருவர் மனதில் மறக்க முடியாத நாளாக இது இருக்கும். தேசத்திற்கு வெண்கலப்பதக்கத்தை கொண்டு வரும் இந்திய ஆடவர் ஹாக்கி அணிக்கு வாழ்த்துகள், இந்த சாதனை மூலம் ஒட்டுமொத்த இந்தியாவின் கவனத்தை அவர்கள் ஈர்த்துள்ளனர். குறிப்பாக இந்திய இளைஞர்களுக்கு உத்வேகமாக இருக்கும். உங்களை நினைத்து நாடே பெருமை கொள்கிறது.
பெருமை கொள்ளும் குடியரசு தலைவர்
குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் தனது ட்விட்டர் பக்கத்தில், ஒலிம்பிக் பதக்கத்தை வென்று வரும் நமது இந்திய ஹாக்கி அணிக்கு வாழ்த்துகள். ஒட்டுமொத்த அணியும் வெற்றிபெற வேண்டும் என்ற வெறியை நன்றாக காட்டினர். இந்திய ஹாக்கியில் இந்த வெற்றி ஒரு புதிய புரட்சியை ஏற்படுத்தும். அதே போல இந்திய இளைஞர்கள் பலருக்கு விளையாட்டு துறையில் பங்காற்ற வேண்டும் என்ற தூண்டுகோலாக இருக்கும் எனக்கூறியுள்ளார்.
முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து
இந்த வெற்றி குறித்து ட்வீட் போட்டுள்ள தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், பதக்கத்திற்காக இந்திய அணி போட்டிப்போட்டது அற்புதமாக இருந்தது. 41 வருட காத்திருப்பு இன்று முடிவுக்கு வந்தது. இந்தியாவுக்காக ஹாக்கியில் 12வது ஒலிம்பிக் பதக்கத்தை வென்ற அணிக்கு எனது வாழ்த்துகள். இந்த வெற்றி, இந்திய ஹாக்கி விளையாட்டில் புதிய அத்தியாயத்தை தொடங்கியுள்ளது.
சுரேஷ் ரெய்னா
பிரபல தொழில் அதிபர் ஆனந்த் மஹிந்திரா, எனக்கு திடீரென நிறம் தெரியாமல் போய்விட்டது. அந்த வெண்கலப்பதக்கம் கூட எனக்கு தங்கம் போல ஜொலிக்கிறது என மெய்சிலிர்க்க வாழ்த்துக்கூறியுள்ளார். இதே போல கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னா தனது ட்விட்டர் பக்கத்தில், இந்திய ஹாக்கி அணிக்கு நெஞ்சார்ந்த வாழ்துகள் உங்கள் கடும் முயற்சிக்கும், வெற்றியையும் நினைத்து பெருமை கொள்கிறோம்.இந்த வெற்றி என்றும் நிலைத்திருக்கும் என பதிவிட்டுள்ளார். இது மட்டுமல்லாமல் பல பிரபலங்களும் வாழ்த்துக்கூறி வருகின்றனர்.