மகளிர் ஹாக்கி
இந்தியாவுக்கு இன்று காலை முதலாவதாக மகளிர் ஹாக்கி போட்டி நடைபெற்றது. இதற்கு முன்னர் நடைபெற்ற நெதர்லாந்து மற்றும் ஜெர்மனி ஆகிய அணிகளுக்கு எதிரான தகுதிச்சுற்று போட்டியில் இந்தியா தோல்வியை சந்தித்தது. இன்று கிரேட் பிரிட்டன் அணிக்கு எதிராக நடைபெற்ற 3வது போட்டியிலாவது வெற்றி பெறும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் மீண்டும் ஏமாற்றம் கொடுத்தது. இப்போட்டியில் மோசமாக விளையாடிருந்த இந்திய மகளிர் அணி 1 - 4 என்ற கோல் கணக்கில் தோல்வியை தழுவியது. இந்திய அணியின் பயிற்சியாளர் ஜோஹெர்ட் மார்ஜினே, இந்த ஒலிம்பிக்கிலேயே இதுதான் மிகவும் மோசமான ஆட்டம் என கடுமையாக சாடியிருந்தார்.
தொடர் வெற்றிகள்
இந்தியாவுக்கு இன்று தொடக்கம் சரிவாக இருந்தாலும், அதனை மாற்றி அமைத்தார் பேட்மிண்டன் வீராங்கனை பி.வி.சிந்து. இன்று நடைபெற்ற 2வது க்ரூப் சுற்று போட்டியில் ஹாங்காங்கின் சியுங் கான் என்ற வீராங்கனையை எதிர்கொண்டார். இந்த போட்டியை அசால்டாக எதிர்கொண்ட சிந்து 21 - 9, 21 - 16 என்ற நேர் செட் கணக்கில் அபார வெற்றி பெற்றார். இந்த போட்டியில் வெற்றி பெறுவதற்கு பி.வி.சிந்து வெறும் 30 நிமிடங்களை மட்டுமே எடுத்துக்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
நம்பிக்கை நாயகி
நடப்பு ஒலிம்பிக்கில் இதுவரை 2 போட்டிகளில் விளையாடியுள்ள சிந்து இரண்டிலுமே வெற்றி பெற்றுள்ளார். இதனால் க்ரூப் ஜே பிரிவில் 4 புள்ளிகளுடன் பலமாக உள்ளார். இதுமட்டுமல்லாமல் டோக்கியோ ஒலிம்பிக்கில் பேட்மிண்டன் போட்டியில் கடைசியாக இருக்கும் ஒரே ஒரு இந்தியர் சிந்துவே ஆகும். இவர் பதக்கம் வென்று கொடுப்பார் என்ற எதிர்பார்ப்பு அதிகளவில் உள்ளது.
பாக்ஸிங்
பாக்ஸிங்கிலும் இன்று இந்தியாவுக்கு சிறப்பாக அமைந்துள்ளது. இன்று நடைபெற்ற 75 கிலோ பிரிவுக்கான தகுதிச்சுற்று போட்டியில் இந்திய வீராங்கனை பூஜா ராணி, அல்ஜீரிய நாட்டு வீராங்கனையை எதிர்த்து போட்டியிட்டார். இதில் சிறப்பாக விளையாடிய பூஜா ராணி 5 - 0, 5 - 0 என்ற கணக்கில் அபார வெற்றி பெற்று காலிறுதிக்கு முன்னேறினார். காலிறுதியில் வென்றுவிட்டால், இந்தியா தனது தனது 2வது பதக்கத்தை உறுதி செய்துவிடும். ஏற்கனவே, பெண்கள் வேல்டெர்வெயிட் பிரிவில் இந்தியாவின் லோவ்லினா காலிறுதிப் போட்டிக்கு முன்னேறி இருப்பது குறிப்பிடத்தக்கது.
தீபிகா குமாரி
இதே போல வில்வித்தை போட்டியிலும் இந்தியா பதக்கம் வெல்லும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. இன்று நடைபெற்ற தனிநபர் வில்வித்தை போட்டியில் இந்திய வீராங்கனை தீபிகா குமாரி கலந்துக்கொண்டார். முதல் போட்டியில் பூடான் நாட்டை சேர்ந்த கர்மாவை எதிர்கொண்ட அவர் 6 - 0 என்ற கணக்கில் வெற்றி பெற்று அடுத்த எலிமினேஷன் சுற்றுக்கு முன்னேறினார். அப்போட்டியில் அமெரிக்காவின் ஜெனிஃபர் என்ற வீராங்கனையுடன் போட்டி போட்ட அவர், 6 - 4 என்ற கணக்கில் அபார வெற்றி பெற்று காலிறுதிக்கு முந்தைய போட்டிக்கு தகுதிப்பெற்றுள்ளார்.
சாய் பிரணீத்
ஆடவர் பேட்மிண்டனை பொறுத்தவரை இந்தியாவின் நம்பிக்கை உடைந்துள்ளது. இன்று நடைபெற்ற 2வது தகுதிச்சுற்று போட்டியில் இந்தியாவின் சாய் பிரணீத் நெதர்லாந்தின் மார்க் காலிஜோவ்வை எதிர்கொண்டார். இப்போட்டியிலும் தடுமாறிய சாய் ப்ரணீத் 14 - 21, 14 -21 என்ற கணக்கில் தோல்வியடைந்தார். இதன் மூலம் அவரின் டோக்கியோ ஒலிம்பிக் பதக்க கனவு முடிவுக்கு வந்தது.
மற்ற பிரிவுகள்
வில்வித்தை : ஆண்களுக்கான தகுதிச்சுற்று போட்டியில் தருண்தீப் ராஜ் தோல்வியடைந்து வெளியேறினார்.
வில்வித்தை: ரவுண்ட் ஆஃப் 32 சுற்றில் இந்திய வீரர் ப்ரவின் ஜாதவ் தோல்வியடைந்து வெளியேறினார்.
துடுப்பு படகு: ஆடவருக்கான இரட்டையர் பிரிவில் இந்தியாவின் அரவிந்த் சிங், அர்ஜுன் லால் பதக்க வாய்ப்பை தவறவிட்டனர்.
பாய்மர படகு: 4வது ரேசின் முடிவில் இந்திய வீரர்கள் வருண் தக்கர், கணபதி ஜோடி 18வது இடத்தை பிடித்துள்ளனர்.