வியப்பூட்டும் ஃபார்ம்
ஒலிம்பிக் தொடரின் தகுதி சுற்றின் முதல் வாய்ப்பிலேயே, 86.65 மீட்டர் தூரம் ஈட்டி வீசி நீரஜ் சோப்ரா அசத்தினார். இதன் மூலம் இரண்டாவது சுற்று, காலிறுதி, அரையிறுதி செல்லாமல், நேரடியாக இறுதிப் போட்டிக்கு முன்னேறினார். தனது முதல் ஒலிம்பிக் தொடரிலேயே அசத்தி, நேரடியாக இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்ற நீரஜ் சோப்ராவுக்கு வாழ்த்துக்கள் குவிந்தது.
இறுதிச்சுற்று
இந்நிலையில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஈட்டி எறிதல் இறுதிப்போட்டி இன்று நடைபெற்றது. மொத்தம் 12 வீரர்கள் பங்கேற்ற இறுதிச்சுற்று, 6 சுற்றுகளாக நடத்தப்பட்டது. அதாவது மொத்தம் 6 வாய்ப்புகள். முதல் 3 சுற்றுகளின் முடிவில் டாப் 8 வீரர்கள் மட்டும் அடுத்த சுற்றுக்கு முன்னேறுவார்கள். பின்னர் மேலும் 3 சுற்றுகள் நடத்தப்படும். இறுதியில் 6 சுற்றுகளின் முடிவிலும் வீரர்கள் வீசும் அதிகபட்ச தூரத்தை கணக்கீட்டு டாப் 3 வீரகளுக்கு பதக்கம் அறிவிக்கப்படும்
முதல் சுற்றுப்போட்டி
தகுதிச்சுற்று போட்டியின் முதல் சுற்றிலேயே கடின இலக்கை நிர்ணயித்திருந்த நீரஜ் சோப்ரா, இறுதிப்போட்டியிலும் அதனையே தொடர்ந்தார். இன்றைய போட்டியில் தனது முதல் சுற்றில் 87. 03 மீட்டர் தூரம் ஈட்டியை வீசி நீரஜ் சோப்ரா அசத்தினார். இந்த தூரமானது மற்ற வீரர்களுக்கு கலக்கத்தை ஏற்படுத்தியது.
முதலிடம்
2வது சுற்றிலும் அதே வேகத்தை தொடர்ந்து காட்டினார். அவர், இந்த முறை 87.58 மீ தூரம் வீசி அனைவரையும் வியப்பில் ஆழ்த்தினார். இவருக்கு பின்னால் வீசிய எந்தவொரு வீரராலும் இவரின் தூரத்தை எட்ட முடியவில்லை. இதனால் 87.58மீ என்பது நீரஜ் சோப்ராவின் அதிகபட்ச தூரமாகி தங்கப்பதக்க வாய்ப்பு பிரகாசமானது.
தடுமாற்றம்
முதல் 2 சுற்றுகளில் அதிவேகமாக நீரஜ் சோப்ரா வீசி வந்த நிலையில் 3வது சுற்றில் அவரின் வேகம் சற்று குறைந்தது. அவரால் 76.79 மீ தூரம் மட்டுமே வீச முடிந்தது. எனினும் அவரின் 87.58 மீ என்ற அதிகபட்ச இலக்கை யாராலும் எட்ட முடியாததால் நீரஜ் தொடர்ந்து முதலிடம் வகித்தார்.
ஃபௌல்
4வது சுற்றில் இன்னும் தூரமாக நீரஜ் சோப்ராவின் ஈட்டி பாயும் என எதிர்பார்க்கப்பட்டது ஆனால், அவர் போட்டி கோட்டினை தாண்டி வீசியதால் அவருக்கான 4வது வாய்ப்பு ஃபௌலாக மாறியது. ஆனால் அவர் தான் தொடர்ந்து டாப் இடத்தில் இருந்தார்.
மீண்டும் ஏமாற்றம்
கடந்த முறை ஃபௌலாக வீசி ஏமாற்றிய சோப்ரா, 5வது சுற்றில் மிக உயரமாக ஈட்டியை தூக்கி எறிந்ததால், அது நீண்ட தூரம் செல்லவில்லை. இதனால் குறைந்தபட்ச தூரத்தை தாண்டாமல் ஃபௌல் ஆனது.
தங்கப்பதக்கம்
முதல் இரண்டு சுற்றுகளில் கலக்கி நீரஜ் சோப்ரா, 3, 4, 5வது சுற்றுகளில் சற்று சறுக்கல்களை சந்தித்தார். எனினும் அவரே முதலிடத்தில் தொடர்ந்து நீடித்தார். அயல்நாட்டு வீரர்கள் ஒருவரால் கூட நீரஜின் வேகத்திற்கு ஈடு கொடுக்க முடியாததால் இறுதியில் முதலிடத்தை பிடித்து தங்கப்பதக்கம் வென்றார் இந்தியாவின் நம்பிக்கை நாயகன் நீரஜ் சோப்ரா. இவருக்கு வாழ்த்துகள் குவிந்து வருகிறது. ஒலிம்பிக்கில் தடகளப்போட்டிகளில் இந்தியாவின் முதல் பதக்கம் இதுவாகும்.