பேட்மிண்டன் போட்டி
இன்று காலையில் பிவி சிந்து பேட்மிண்டன் பெண்கள் ஒற்றையர் பிரிவு காலிறுதிக்கு முந்தைய சுற்று போட்டியில் ஆடினார். இதில் டென்மார்க்கின் மியாவை வீழ்த்தி பிவி சிந்து வெற்றி பெற்றுள்ளார். 21- 15, 21- 13 என்ற நேர் செட்களில் பிவி சிந்து வெற்றி பெற்றுள்ளார். இதன் மூலம் அவர் காலிறுதிக்கு தகுதி பெற்றார். இது இவரின் ஹாட்ரிக் வெற்றியாகும்.
அட்டானு தாஸ்
இதையடுத்து ஒலிம்பிக் வில்வித்தை போட்டியில் இன்று இந்திய வீரர் அட்டானு தாஸ் சிறப்பாக ஆடினார். இதில் 32 ஜோடி சுற்றில் இந்தியாவின் அட்டானு தாஸ் இன்று காலை வெற்றிபெற்றார். 6-4 என்ற புள்ளி கணக்கில் சீன தைபே வீரர் டெங்கை வீழ்த்தி வெற்றி பெற்றுள்ளார். இதையடுத்து 1/16 சுற்றில் 6-5 என்ற புள்ளி கணக்கில் தென்கொரிய வீரர் ஜென்க் ஓவை வீழ்த்தி வென்று இவரும் காலிறுதிக்கு தகுதி பெற்றார்.
ஆடவர் ஹாக்கி
அதோடு ஒலிம்பிக் 2020 ஹாக்கி போட்டியில் ஆண்கள் பிரிவில் இந்திய அணி இன்று வெற்றி பெற்றுள்ளது. அர்ஜென்டினாவை 3-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி இந்திய அணி வெற்றி பெற்றுள்ளது. 4 போட்டிகளில் இந்தியா இதுவரை 3 போட்டிகளில் வென்றுள்ளது. இன்றைய வெற்றி மூலம் இந்திய அணி காலிறுதிக்கு தகுதி பெற்றது
பாக்ஸிங் போட்டி
இதெல்லாம் போக இன்னொரு நல்ல செய்தியாக ஆண்கள் பாக்சிங் +91 கிலோவில் இந்தியாவின் சதிஷ் குமார் ஜமைக்காவின் ரிக்கார்டோ பிரவுனை வீழ்த்தி வெற்றிபெற்றுள்ளார். இதன் மூலம் சதீஷ் குமார் காலிறுதிக்கு தகுதி பெற்றுள்ளார். ரிக்கார்டோவை 4-1 என்ற கணக்கில் வீழ்த்தி சதிஷ் குமார் வெற்றி பெற்றார். ஒரே நாளில் 4 இந்திய குழு காலிறுதிக்கு தகுதி பெற்று அசத்தி உள்ளது.
நம்பிக்கை உடைந்தது
பாக்ஸிங்கில் ஆடவர் அணி சிறப்பாக செயல்பட்ட நிலையில் மகளிர் குத்துச்சண்டை போட்டியில் ஏமாற்றமே மிஞ்சியது. இன்று நடைபெற்ற அரையிறுதிக்கு முந்தைய போட்டியில் மேரி கோம், கொலம்பியா வீராங்கனை இங்கிரிட் வெலன்சியாவை எதிர்த்து போட்டியிட்டார். விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த போட்டியில் 3 - 2 என்ற கணக்கில் மேரி கோம் தோல்வியடைந்தார். இதன் மூலம் அவரின் பதக்க கனவு முடிவுக்கு வந்தது.
அசத்திய இந்தியர்கள்
துடுப்பு படகு ஆண்கள் இரட்டையர் பிரிவில் இந்திய அணி அரையிறுதியில் நேற்றே தோல்வியடைந்த நிலையில் இன்று ரேங்கிங் சுற்று போட்டிகள் நடந்தது. இதில் அருண் லால் மற்றும் அர்ஜுன் சிங் 6:29.66 நிமிடத்தில் இலக்கை அடைந்து 5வது இடம் பிடித்தது. இதனால் மொத்தமாக துடுப்பு படகு ஆண்கள் இரட்டையர் பிரிவு ஆட்டத்தில் அருண் லால் மற்றும் அர்ஜுன் சிங் 11வது இடம் பிடித்து தொடரில் இருந்தே வெளியேறி உள்ளார்.
துப்பாக்கி சுடுதல் போட்டி
ஒலிம்பிக் 25 மீ பெண்கள் பிஸ்டல் துப்பாக்கி சூடு பிரிவு போட்டிகள் இன்று நடைபெற்றன. இந்தியாவின் மனு பாகர் 97, 97, 98 என்று மொத்தம் 292 புள்ளிகளை பெற்றார். இன்று இவரின் சராசரி 9.733 புள்ளிகள் ஆகும். இன்று 5வது இடத்தை பிடித்த மனு பாகர், நாளைய சுற்றில் இவர் 8 இடங்களுக்குள் இடம்பெற்று அடுத்த சுற்றுக்கு முன்னேற அதிக வாய்ப்புள்ளது. மற்றொரு புறம் இந்தியாவின் ராகி சர்னோபாட் 96, 97, 94 என்று மொத்தம் 287 புள்ளிகளை மட்டுமே பெற்றார். இன்று இவரின் சராசரி 9.567 புள்ளிகள் ஆகும். இன்று 25வது இடத்தை பிடித்த ராகி சர்னோபாட் 8 இடங்களுக்குள் வர வேண்டும்.
பாய்மர படகுப்போட்டி
பாய்மர படகுப்போட்டியில் தினமும் 2 ரேஸ்கள் வீதம் 6 நாட்களுக்கு 12 ரேஸ்கள் நடக்கும். இதுவரை நடந்த 4 ரேஸ்களில் ரேஸ் 1: 18வது இடம், ரேஸ் 2: 18வது இடம் ரேஸ் 3: 17வது இடம் ரேஸ் 4: 19வது இடம் பிடித்திருந்தனர். இந்நிலையில் இன்று 5 மற்றும் 6வது ரேஸ் நடைபெற்றது. இதில் சிறப்பாக விளையாடிய வருண், கணபதி ஜோடி வது ரேஸில் 16வது இடமும் 6வது ரேஸில் 7வது இடத்தை பிடித்தனர்.