கடைசிப் போட்டி
இந்த நிலையில் இன்று இந்திய மகளிர் ஹாக்கி அணி, வெண்கலப் பதக்கத்திற்கான போட்டியில் மோதியது. இந்த போட்டியில் கிரேட் பிரிட்டன் அணியை இந்திய பெண்கள் ஹாக்கி அணி எதிர்கொண்டது. இந்த போட்டியில் தொடக்கமே கிரேட் பிரிட்டன் அணிக்கு சாதகமாக அமைந்தது. அந்த அணிக்கு ஆட்டத்தில் 12 நிமிடத்தில் 3 முறை கோல் அடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. ஆனால் இந்திய அணியின் கீப்பர் சவிதா புனியா சிறப்பாக செயல்பட்டு கோலை தடுத்தார்.
தொடக்கமே சறுக்கல்
இதன்பின் நீண்ட போராட்டத்திற்கு பிறகு பிரிட்டன் அணி முதல் கோல் போட்டது. இந்தியாவின் தீப் கிரேஸ் செய்த தவறால் "செல்ப் கோல்" விழுந்தது. அதன்பின் தொடர் ஆக்ரோஷத்தை காட்டிய பிரிட்டன் அணி 23வது நிமிடத்தில் இரண்டாவது கோல் போட்டது. இதன்பின்தான் இந்திய பெண்கள் அணி சிறப்பான கம்பேக் கொடுத்தது. ஆட்டத்தின் 23 மற்றும் 26வது நிமிடத்தில் அடுத்தடுத்து கோல் அடித்து இந்தியா வலுவடைந்தது. அதன்பின் ஆட்டத்தின் 27வது நிமிடத்தில் இந்தியாவின் கட்டாரியா 3வது கோல் போட்டார் . இதனால் முதல் பாதியில் 3 : 2 என இந்தியா தான் முன்னிலை பெற்றது.
போராடி தோல்வி
ஆனால் 2வது பாதியில் பிரிட்டன் அணி வரிசையாக 2 கோல்களை அடித்து 4 : 3 என முன்னிலை பெற்றது. ஆட்டத்தில் நீண்ட நேரம் மீதம் இருந்ததால், இந்தியா இந்த முறையும் கம்பேக் கொடுக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் கடைசி வரை இந்தியாவால் ஒரு கோல் கூட போட முடியாமல் வீழ்ந்தது. வெண்கலப்பதக்கத்திற்கான கனவும் முடிவுக்கு வந்தது.
புகைப்படம்
தேசத்திற்காக இவ்வளவு போராடியும் பதக்கம் வென்று கொடுக்க முடியவில்லை என, இந்திய வீராங்கனைகள் மைதானத்திலேயே கீழே அமர்ந்து கதரி அழுதனர். ஆட்டத்தின் தொடக்கத்தில் பிரிட்டன் போட்ட கோல்களை தடுத்து இந்திய அணியின் சுவர் போன்று இருந்த கீப்பர் சவிதா, மனம் உடைந்து அழத்தொடங்கினார். இந்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இணையத்தில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.
ரசிகர்கள் ஆறுதல்
இந்தியாவுக்காக இவ்வளவு தூரம் வந்ததே பெருமை மிகுந்த விஷயம். பதக்கம் வெல்லவில்லை என்றாலும் பரவாயில்லை, நீங்கள் அனைவருமே எங்கள் தங்கம் தான் என ரசிகர்கள் இணையத்தில் ஆறுதல் தெரிவித்து வருகின்றனர். இந்த தொடரில் முதலில் வரிசையாக 3 போட்டிகளில் தோல்வி அடைந்து, அதன் பின்னர் கம்பேக் கொடுத்து போராடி இந்த நிலைக்கு இந்தியா வந்துள்ளது.
விமர்சனங்களுக்கு பதிலடி
இந்திய பெண்கள் ஹாக்கி அணி லீக் போட்டிகளை கூட தாண்டாது என கூறப்பட்டு வந்தது. ஆனால் அரையிறுதி வரை சென்றது விமர்சனங்களுக்கு பதிலடி கொடுக்கப்பட்டது. ஒலிம்பிக்கில் இந்தியாவின் பலத்தை மீண்டும் நிரூபித்துவிட்டதால், அடுத்த ஒலிம்பிக்கில் நிச்சயம் பதக்கம் வந்து சேரும் என்ற நம்பிக்கை எழுந்துள்ளது.