இறுதிச்சுற்று
இந்த இறுதிப்போட்டி மொத்தம் 6 சுற்றுகளாக நடத்தப்பட்டது. அதாவது மொத்தம் 6 வாய்ப்புகள் கொடுக்கப்பட்டன. தனது முதல் சுற்றில் 87. 03 மீட்டர் தூரம் ஈட்டியை வீசி நீரஜ் சோப்ரா அசத்தினார். இது அனைவருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. முதல் சுற்றிலேயே அசத்திய அவர், 2வது சுற்றில் 87.58 மீ தூரம் வீசி அனைவரையும் வியப்பில் ஆழ்த்தினார். இதன் பின்னர் நீரஜ் வீசிய தூரத்தை எந்த வீரராலும் வீசி முந்த முடியவில்லை. இதனால் இறுதிப்போட்டியில் தங்கப்பதக்கம் வென்று அவர் அசத்தியுள்ளார்.
முதல் பதக்கம்
ஒலிம்பிக் தொடரில் இந்தியா கடந்த 1920ம் ஆண்டு முதல் பங்கேற்று வருகிறது. பல்வேறு போட்டிகளிலும் இந்தியா பதக்கங்களை வென்று வந்தாலும், தடகளப்போட்டியில் மட்டும் இதுவரை ஒரு பதக்கத்தை கூட வென்றதில்லை. கடந்த 1960ம் ஆண்டு மில்கா சிங், 1984ம் ஆண்டு பி.டி.உஷா ஆகியோரால் கூட பதக்கம் வென்று கொடுக்க முடியவில்லை. இந்நிலையில் பதக்கத்திற்காக 100 ஆண்டுகளாக காத்திருந்த இந்தியாவின் ஏக்கத்தை இன்று நீரஜ் சோப்ரா போக்கியுள்ளார்.
தங்கம் வெல்லும் 2வது நபர்
ஒலிம்பிக் வரலாற்றில் இந்தியாவுக்காக புதிய சரித்திரம் படைத்துள்ளார் நீரஜ் சோப்ரா. ஒலிம்பிக்கில் தனி நபர் ஆட்டத்தில் தங்கப்பதக்கம் வெல்லும் 2வது இந்தியர் என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார். இதற்கு முன்னர் கடந்த 2008ம் ஆண்டு நடைபெற்ற பெய்ஜிங் ஒலிம்பிக்கில் துப்பாக்கிச்சுடுதல் பிரிவில் அபினவ் பிந்த்ரா தங்கப்பதக்கம் வென்றிருந்தார்.
ஒலிம்பிக்கின் தனிச்சிறப்பு
பதக்கம் மட்டுமின்றி இந்தியாவுக்கு மிகப்பெரும் கவுரவமும் சோப்ராவினால் கிடைத்துள்ளது. ஒலிம்பிக்கில் தங்கப்பதக்கம் வென்றால் அந்த வீரரின் தாய் நாட்டின் தேசிய கீதம் அனைவரின் முன்னிலையிலும் ஒலிக்கப்படும். இந்த கவுரவம் வெள்ளிப்பதக்கம், வெண்கலப்பதக்கம் வென்றால் ஒலிக்கப்படமாட்டாது. தங்கப்பதக்கத்திற்கு மட்டுமே கிடைக்க கூடிய பெருமை ஆகும்.
வரலாறு
இந்நிலையில் 13 ஆண்டுகளுக்கு பின்னர் இன்று இந்தியாவின் தேசிய கீதம் ஒலிம்பிக்கில் ஒலிக்கப்பட்டுள்ளது. ஒலிம்பிக்கில் இந்தியா கடந்த 1920ம் ஆண்டு முதல் பங்கேற்று வருகிறது. அன்று முதல் ஒலிம்பிக்கில் இந்திய ஹாக்கி அணி மட்டுமே தங்கப்பதக்கம் வெல்லப்பட்டு தேசிய கீதம் ஒலித்து வந்தது. ஆனால் அதுவும் 1980ம் ஆண்டுக்கு பின்னர் ஹாக்கி அணி தங்கம் வெல்லாததால் நிறைவேறாமல் இருந்தது. பின்னர் கடந்த 2008ம் ஆண்டு பெய்ஜிங் ஒலிம்பிக்கில் தனி நபர் பிரிவில் இந்தியாவுக்காக முதல் தங்கப்பதக்கம் வென்று தேசிய கீதத்தை ஒலிக்க செய்தார் துப்பாக்கிச்சுடுதல் வீரர் அபினவ் பிண்ட்ரா.
வைரல் வீடியோ
இந்நிலையில் 13 ஆண்டுகளுக்கு பின்னர் இன்று ஒலிம்பிக்கில் இந்தியாவின் தேசிய கீதம் ஒலிக்கப்பட்டது. இந்தியாவின் தங்க மகன் நீரஜ் சோப்ராவுக்கு தங்கப்பதக்கம் அணிவிக்கப்பட்ட போது இந்தியாவின் தேசிய கீதம் ஒலிக்கப்பட்டது. இந்தியர்களின் கனவை நிஜமாக்கி பெருமைப்பட வைத்த அந்த தருணத்தின் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.