போட்டி
டோக்கியோ ஒலிம்பிக்கில் சாஜன் பிரகாஷ் 100மீ மற்றும் 200மீ என 2 பிரிவு போட்டிகளில் கலந்துக்கொண்டுள்ளார். இதில் 200 மீட்டர் பட்டர்ஃப்ளை ஹீட் பிரிவு போட்டி கடந்த ஜூலை 26ம் தேதி நடைபெற்றது. இப்போட்டி தூரத்தை 4வது வீரராக கடந்தார்.எனினும் அடுத்த சுற்றுக்கு முன்னேறவில்லை. 5 குழுக்களாக நடைபெற்ற இப்போட்டியில் ஒட்டுமொத்த வீரர்களும் எவ்வளவு நேரத்தில் போட்டி தூரத்தை கடந்தனர் என்பதை கணக்கிட்டு முதல் 16 இடங்களை பிடிக்கும் வீரர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். அதில் சாஜன் பிரகாஷ் 24வது இடத்தை பிடித்து வெளியேறினார்.
100மீ போட்டி
இந்நிலையில் இன்று அவருக்கான 100மீட்டர் பட்டர்ஃப்ளை ஹீட் பிரிவு போட்டி நடைபெற்றது. மொத்தம் 8 குழுக்களாக நடைபெற்ற இந்த போட்டியில் 2வது குழுவில் சாஜன் இடம்பெற்றார். போட்டி தூரமான 100மீட்டரை அவர் 53.45 விநாடிகளில் கடந்து 2வது இடம் பிடித்தார். எனினும் அவரால் அரையிறுதி சுற்றுக்கு முன்னேற முடியவில்லை.
காரணம் என்ன
இந்த நீச்சல் போட்டி மொத்தம் 8 குழுக்களாக பிரிக்கப்பட்டு நடைபெற்றது. அனைத்து குழுவிலும் உள்ள வீரர்கள் எவ்வளவு நேரத்தில் போட்டி தூரத்தை கடந்தனர் என்பதை கணக்கிட்டுதான் அடுத்த சுற்றுக்கு தகுதி பெறுவார்கள். அந்தவகையில் முதல் 16 இடங்களை பிடிக்கும் வீரர்கள் அரையிறுதிக்கு முன்னேறுவார்கள். ஆனால் சாஜன் பிரகாஷ் ஒட்டுமொத்தமாக 46 வது இடத்தை பிடித்துள்ளார். இதனால் தோல்வி உறுதியாகியுள்ளது.
ரசிகர்கள் ஏமாற்றம்
நீச்சல் போட்டியை பொறுத்தவரை இந்திய ரசிகர்களால் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட மானா படேல், தோல்வியடைந்து நடையை கட்டினார். இதே போல ஆண்கள் பிரிவில் ஸ்ரீ ஹரி நடராஜனும் தோல்வியை தழுவி டோக்கியோ ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்லும் வாய்ப்பை தவறவிட்டனர். இந்த சூழலில் தற்போது கடைசி நம்பிக்கையாக இருந்த சாஜன் பிரகாஷும் வெளியேறிவிட்டார்.