மல்யுத்த வீரர் தீபக்
ஒலிம்பிக் 2020 மல்யுத்தத்தின் ஆண்கள் 86kg பிரிவில் இந்திய வீரர் தீபக் புனியா சிறப்பாக விளையாடி வந்தார். இன்று காலை 1/8 பைனல் ஆட்டம் நடைபெற்றது. இதில் இந்தியாவின் தீபக் புனியா நைஜீரியா நாட்டின் அகிமிரோவை எதிர்கொண்டார். இதில் தொடக்கத்தில் இருந்தே தீபக் புனியா ஆதிக்கம் செலுத்திய தீபக் புனியா, நைஜீரியா நாட்டின் அகிமிரோவை 12:1 என்ற புள்ளி கணக்கில் வீழ்த்தினார். இதன் மூலம் தீபக் புனியா மல்யுத்தத்தின் ஆண்கள் 86kg பிரிவு ஆட்டத்தில் காலிறுதிக்கு தகுதி பெற்றார்.
காலிறுதிப்போட்டி
இன்று காலை நடைபெற்ற காலிறுதிப்போட்டியிலும் தீபக் புனியா தனது ஆதிக்கத்தை காட்டினார். இந்த காலிறுதிப்போட்டியில் சீன வீரர் லின் சூசனை எதிர்த்து தீபக் போட்டியிட்டார். இதிலும் சிறப்பாக செயல்பட்ட அவர், 6 - 3 என்ற புள்ளிக்கணக்கில் வீழ்த்தி அரையிறுதிப்போட்டிக்கு தகுதிப்பெற்றார்.
அரையிறுதி
இந்நிலையில் தீபக் புனியாவுக்கான அரையிறுதிப்போட்டி இன்று மதியம் நடைபெற்றது. இந்த போட்டியில் அமெரிக்காவின் டேவிட் டெய்லரை அவர் எதிர்கொண்டு விளையாடினார். இந்த போட்டியின் தொடக்கமே படு விறுவிறுப்பாக சென்றது. இரு வீரர்களும் விடாப்படியாக விளையாடியதால் முதல் 1.30 நிமிடத்திற்கு இரண்டு பேருமே ஒரு புள்ளிகளை கூட பெறவில்லை. ஆனால் பின்னர் சுதாரித்துக்கொண்ட டேவிட் டெய்லர் சிறப்பான மூவினால் 7 புள்ளிகளை கைப்பற்றி 7 - 0 என முன்னிலை பெற்றார்.
ஏமாற்றமே மிஞ்சியது
இதன் பின்னராவது தீபக் புனியா கம்பேக் கொடுப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் கடைசி வரை டேவிட் டெய்லரின் கையே ஓங்கி இருந்தது. இதனால் அவர் மேலும் 3 புள்ளிகளை கைப்பற்றி 10 - 0 என்ற புள்ளிக்கணக்கில் அபார வெற்றி பெற்றார். இதன் மூலம் இறுதிப்போட்டிக்கு செல்லும் தீபக் புனியாவின் கனவு பொய்யானது.
வெண்கலப்பதக்கம்
தீபக் புனியா அரையிறுதிப்போட்டியில் தோல்வியடைந்தாலும், வெண்கலப்பதக்கம் வெல்ல வாய்ப்பு உள்ளது. வெண்கலப்பதக்கத்திற்கான போட்டி நாளை நடைபெறவுள்ளது. ஆனால் தீபக்கை எதிர்த்து விளையாடப்போவது யார் என்பது இன்னும் உறுதியாகவில்லை.