ஒலிம்பிக்கில் இந்திய குழு
ஒலிம்பிக் போட்டிகளின் தனிநபர் பிரிவில் இந்தியாவுக்கு ஒவ்வொரு முறையும் பதக்க எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. 2008ம் ஆண்டு பெய்ஜிங்கில் நடந்த ஒலிம்பிக்கில் துப்பாக்கி சுடுதல் வீரர் அபினவ் பிந்த்ரா தங்கப்பதக்கமும், விஜேந்தர் சிங், சுஷில் குமார் ஆகியோர் குத்துச்சண்டையில் தங்கம் வென்று இந்திய வீரர்களுக்கு உத்வேகம் கொடுத்தனர். அதன் பிறகு 2012ம் ஆண்டு ஒலிம்பிக்ஸ் மற்றும் 2016 ரியோ ஒலிம்பிக்கில் பதக்க எண்ணிக்கைகள் உயர்ந்தன. அந்தவகையில் இந்தாண்டு இந்தியாவுக்கு அதிக பதக்கங்கள் கிடைக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.
தடகளம் - 1
தடகள பிரிவில் இந்தியா இதுவரை பெரிய சக்தியாக விளங்கவில்லை. ஆனால் இந்தாண்டு ஈட்டி எறிதல் பிரிவை சேர்ந்த நீரஜ் சோப்ரா, ஷிவ்பால் சிங் ஆகியோர் நம்பிக்கை கொடுக்கும் படி உள்ளனர். நீரஜ் சமீபத்தில் நடைபெற்ற ஐரோப்பா தொடர்களில் சிறப்பாக விளையாடி அசத்தினார். எனவே ஒலிம்பிக்கில் நிச்சயம் ஒரு பதக்கம் அடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. இதே போல ஒலிம்பிக்கில் 2வது முறையாக பங்கேற்கும் நட்சத்திர வீராங்கனை டூட்டி சந்த் இந்தாண்டு 200மீ பிரிவில் பதக்கம் வென்று வரலாறு படைப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
பேட்மிண்டன் பிரிவு - 1
பேட்மிண்டனில் உலக சாம்பியனான பி.வி.சிந்து கடந்த ஒலிம்பிக் தொடரில் வெள்ளிப்பதக்கம் வென்று அசத்தினார். இவர் இந்த முறை தங்கம் வெல்ல வாய்ப்புள்ளது. ஒலிம்பிக்கில் நடப்பு சாம்பியனான கரோலினா மர்லின் இந்தாண்டு ஒலிம்பிக்கில் கலந்துக்கொள்ளவில்லை என்பதால் சிந்துவுக்கு பெரும் நிம்மதியாக இருக்கும். எனினும் தைவானை சேர்ந்த டை ட்ஸூ யிங், ஜப்பானின் நொசோமி ஆகியோர் சவால் கொடுக்கும்படி உள்ளனர். சிந்துவை தவிர்த்து பி.சாய் பிரசாத்தும் பதக்கம் வெல்ல வாய்ப்புகள் அதிகம் உள்ளது.
குத்துச்சண்டை பிரிவு - 2
இந்தியாவில் இருந்து குத்துச்சண்டைக்காக 9 பேர் பங்கேற்றுள்ளனர். இந்தியாவின் முன்னணி வீராங்கனையான மேரி கோம் (52 கிலோ), வீரர் அமித் பங்கல் (52கிலோ) ஆகியோர் பதக்கம் அடிக்க வாய்ப்பு அதிகம் உள்ளது. இவர்களை தவிர்த்து பூஜா ராணி ( 75கிலோ), ஸ்மிம்ரஞ்சித் கவுர் (60கிலோ), லோவிலினா போர்கோஹைன் (69 கிலோ) ஆகியோரும் நல்ல செயல்பாட்டை காட்டி வருவதால் பதக்க வாய்ப்புகள் அதிகரிக்கலாம்.
ஹாக்கி அணி - 1
மண்ப்ரீத் சிங் தலைமையிலான இந்தியாவின் ஹாக்கி அணி சமீப காலமாக மிகவும் அழுத்தமான போட்டிகளில் கூட சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இந்த முறை எல்லாம் சரியாக அமைந்தால் சாம்பியன் பட்டம் வென்று வரலாறு படைக்க அதிக வாய்ப்புள்ளது. எனினும் ஆஸ்திரேலியா, அர்ஜெண்டினா, நெதர்லாந்து அணிகள் சவால் கொடுக்கும். இதே போல தான் இந்திய மகளிர் அணியின் நிலைமையும். ராணி ராம்பால் தலைமையிலான இந்திய மகளிர் அணி கடந்த சில தொடர்களில் மிகவும் சிறப்பாக செயல்பட்டிருக்கிறது.
மல்யுத்த பிரிவு - 2
மல்யுத்தத்தை பொறுத்தவரை ஆண்கள் பிரிவில் பஜ்ரங் புனியாவும் (65 கிலோ), மகளிர் பிரிவில் வினேஷ் போகட்( 53கிலோ) ஆகியோர் இந்தியாவின் நம்பிக்கை நட்சத்திரமாக விளங்குகின்றனர். சர்வதேச அளவிலான போட்டிகளில் இவர்கள் இருவரும் தலைசிறந்தவர்களாக விளங்குகின்றனர். எனவே இவர்கள் இந்த முறை நிச்சயம் பதக்கம் அடிப்பார்கள் எனக்கூறப்படுகிறது.
Recommended Video
துப்பாக்கி சுடுதல் பிரிவு - 2
இந்தியாவில் இருந்து அதிகபட்சமாக 15 துப்பாக்கி சுடும் வீரர், வீராங்கனைகள் ஒலிம்பிக்கிற்கு தகுதி பெற்றுள்ளனர். இதில் இருந்து 5 பதக்கங்களாவது கிடைக்கும் என இந்தியா எதிர்பார்த்துள்ளது. இளம் வீராங்கனைகள் திவ்யாஷ் சிங் மற்றும் இளவேனில் வாளரிவன் 10 மீ ஏர் ரைஃபிள் பிரிவில் சிறப்பாக உள்ளனர். இவர்களை தவிர்த்து அன்ஜும் மௌட்கில், அபுர்வி, ஆகியோர் 10 மீ ஏர் ரைஃபிள், மனு பக்கர், சௌரப் சவுத்திரி, அபிஷேக் வெர்மா அகியோர் 10 மீ ஏர் பிஸ்டல் ஆகியோர் நம்பிக்கை தரும்படி உள்ளனர்.
வில்வித்தை பிரிவு - 1
இந்தியாவின் தலைசிறந்த வில்வித்தை வீராங்கனையான தீபிகா குமாரி கடந்த 2 ஒலிம்பிக் போட்டிகளில் பதக்கம் வென்றிருக்க வேண்டியவர். ஆனால் முடியவில்லை. இந்த முறை பதக்கம் வென்று புதிய வரலாறு படைப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. அவரின் கணவர் அடனு தாஸும் உலகக்கோப்பையில் சிறப்பாக செயல்பட்டுள்ளார். எனவே பதக்கம் வெல்ல அவர் கடுமையாக முயற்சிப்பார் என தெரிகிறது.