வெள்ளிப்பதக்கம்
மகளிர் பளுதூக்குதலில் 49 கிலோ எடை பிரிவில் கலந்துக்கொண்ட இந்திய வீராங்கனை மீராபாய் சானு ஸ்நாட்ச் பிரிவில் இவர் 87 கிலோ தூக்கினார். அதன்பின்னர் நடைபெற்ற க்ளின் அண்டு ஜெர்க் பிரிவில் 115 கிலோ தூக்கி அசத்தினார். இதன் மூலம் மொத்தம் 202 கிலோ எடையை தூக்கி வெள்ளிப்பதக்கம் வென்றார். சீனாவின் ஜிஹுய் ஹூ 210 கிலோ மொத்த எடை தூக்கி தங்கம் பதக்கம் வென்றுள்ளார். வாழ்வில் கடும் போராட்டங்களை சந்தித்த மீராபாய் 5 வருடங்களுக்கு முன்பே விளையாட்டு போட்டிகளை விட்டு விலகியிருக்க வேண்டியவர் என அவரின் தாயார் தெரிவித்துள்ளார்.
ஆனந்த கண்ணீர்
தனது மகள் வெற்றி பெறுவதை தொலைக்காட்சி மூலம் பார்த்து ஆனந்த கண்ணீர் விட்ட மீராபாயின் தாயார் பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர், 2016ம் ஆண்டு ரியோ ஒலிம்பிக்கில் தோல்வியை பெற்ற போதே இனி எந்தவிதமான போட்டிகளிலும் கலந்துக்கொள்ளபோவதில்லை எனக்கூறினார் எனத்தெரிவித்துள்ளார். ரியோ ஒலிம்பிக்கின் போது மீரா எனக்கு தொலைப்பேசியில் அழைத்து முடிவை கூறினார். அவர் தோல்வியடைந்துவிட்டதை கேட்டு மொத்த குடும்பமும் அழுதோம்.
சறுக்கல்
எனினும் மீராவிடம் நாங்கள் தொடர்ந்து விளையாட வேண்டும் என்று தான் அறிவுறுத்தினோம். அவரிடம் நாங்கள் உனக்கு எப்போதும் பக்க பலமாய் இருப்போம். சிக்கல் வந்துக்கொண்டே இருக்கும். ஆனால் பாதியில் விட்டுவிட்டு ஓடிவிடக்கூடாது. எனவே தொடர்ந்து முயற்சி செய் என நம்பிக்கை கொடுத்தோம். அதன் விளைவாகவே இன்று வெள்ளிப்பதக்கம் கிடைத்துள்ளது. இது மீராபாய்க்கும் எங்களுக்கும் புதிய வாழ்கையையே உண்டாக்கும்.
வரவேற்பு
மீரா பாய் பதக்கத்துடன் இந்தியாவுக்கு திரும்பும் போது அவருக்கு பிடித்த உணவுகளை நான் சமைத்து வைத்திருப்பேன். அதை தான் அவரும் விரும்புகிறார். மீரா பாய்க்கு நீரில் வேகவைத்த காய்கறிகள், மீன் வகைகள், வாழைப்பூ, ஆகியவை மிக பிடிக்கும் எனவே அவருக்காக காத்திருக்கிறேன் என தெரிவித்தார்.