திணறல்
இந்த போட்டியில் இந்தியாவின் டிஃபன்ஸ் முதல் பாதி ஆட்டத்தில் அவ்வளவு சிறப்பாக இல்லை. முக்கியமாக ஜெர்மனி அணி கோல் போடும் வாய்ப்பினை இந்தியா அடுத்தடுத்து எளிதாக ஏற்படுத்தி கொடுத்தது. தொடர்ச்சியாக முதல் பாதியில் ஜெர்மனி அடுத்தடுத்து மூன்று கோல் போட்டு தலைவலி கொடுத்தது. இந்திய அணியின் கதை அப்போதே முடிந்துவிட்டது என சிலர் எண்ணினனர்.
பரபரப்பு நிமிடங்கள்
இந்த போட்டியில் ஜெர்மனி அணிக்கு கிட்டத்தட்ட 10 பெனால்டி கார்னர் வாய்ப்புகள் கிடைத்தது. குறிப்பாக ஆட்டத்தின் கடைசி 5 நிமிடத்தில் 3 பெனால்டி கார்னர் வாய்ப்புகளை ஜெர்மணி அள்ளியது. கடந்த அரையிறுதிப்போட்டியில் இதேபோல் பெல்ஜியத்திற்கு நிறைய பெனால்டி கார்னர் வாய்ப்புகளை இந்திய அணி தூக்கி கொடுத்தது. இதன் காரணமாகவே அந்த போட்டியில் இந்திய அணி தோல்வியை சந்திக்க நேர்ந்தது.
பெனால்டி கார்னர்கள்
இன்று கிடைத்த 10 பெனால்டி கார்னர் வாய்ப்புகளை பயன்படுத்தி ஜெர்மணி அணியால் எளிதாக வென்றிருக்க முடியும். ஆனால் இந்திய அணியின் கீப்பர் ஸ்ரீஜேஷ், தன்னை தாண்டி பந்து போகாதபடி அசையாமல் நின்றார். இந்திய ஹாக்கி அணியின் தூண் என்று அழைக்கப்படும் இவர் கடைசிவரை சிறப்பாக ஆடி இந்திய அணியின் வெற்றிக்கு காரணமாக இருந்தார். அதாவது 6 பெனால்டி கார்னர் ஷாட்கள், இரண்டு நேரடி கோல்களை தடுத்து இந்தியாவின் வெற்றிக்கு முக்கிய பங்காற்றியிருக்கிறார் ஸ்ரீஜேஷ்.
பாராட்டு மழை
கடைசி சில நிமிடங்களில் கூட இந்திய அணி தோற்கும் சூழல் இருந்த போதும், கோல் எதுவும் போடாதபடி, காத்து நின்ற ஸ்ரீஜேஷுக்கு சமூக வலைதளங்களில் ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர். இந்த தொடர் முழுவதுமே இந்தியாவின் டிஃபன்ஸையும் தாண்டி ஒரு வீரர் அனைத்து கோல்களையும் தடுத்து அபாரமாக செயல்பட்டுள்ளார் என குறிப்பிட்டு வாழ்த்தி வருகின்றனர்.
ஸ்ரீஜேஷ்
இந்நிலையில் இளைஞர்களை கவர்ந்துள்ள ஸ்ரீஜேஷ் இந்தியாவின் வெற்றி குறித்து பேசியுள்ளார். அதில் அவர், ஹாக்கி அனைவருக்கும் மிகவும் பிடித்தமான விளையாட்டாக இருக்கும். பிரதமர் மோடி கூட இன்றைய காலை பணிகள் அனைத்தையும் ஒதுக்கிவைத்துவிட்டு ஹாக்கி போட்டியை தொலைக்காட்சியில் கண்டுள்ளார். அதை நினைத்து பார்க்கும் போது எங்களுக்கு மிகவும் பெருமையாக இருக்கிறது. இதுபோன்ற பதக்கங்களை நாங்கள் மேலும் மேலும் குவிக்க ஆசைப்படுகிறோம். அதுவும் இதுபோன்ற வெற்றிகள் இளம் தலைமுறையினருக்கு வெள்ளி மற்றும் தங்கப்பதக்கங்களை வென்று கொடுக்க வேண்டும் என்ற தூண்டுகோலாக இருக்கும்.
இனி பதக்க வேட்டை தான்
நாங்கள், ஹாக்கியின் வரலாற்றை கேட்டு வளர்ந்தவர்கள். தற்போது வருங்கால தலைமுறையினருக்கு எப்படி பதக்கம் வெல்ல வேண்டும் என்பதை கற்றுத்தர போகிறோம். அந்த பழைய நாட்களை மீண்டும் கண்முன்னே கொண்டு வரப்போகிறோம் எனக்கூறியுள்ளார். பதக்கங்களை குவிக்கப்போகிறோம்.
மண்ப்ரீத் சிங்
இதே போல இந்திய அணியின் கேப்டன் மண்ப்ரீத் சிங்கும், வெற்றி குறித்து பூரிப்புடன் பேசியுள்ளார். அதில், எங்களை தொடர்ந்து ஆதரித்து வந்த அனைவருக்கும் நன்றிகள். எங்களுக்காக இறைவனிடம் பிரார்த்தனை செய்ததாலேயே இது சாத்தியமானது. அனைவரும் ஒன்று கூடும் திருவிழா தான் ஒலிம்பிக். அங்கு வரும் மக்கள் எங்களுக்காக உற்சாகப்படுத்தி வெற்றி பெறவைப்பதே அவர்களின் பொறுப்பு எனக்கூறியுள்ளார்.
அசைக்க முடியாத சாதனை
இந்தியா ஒலிம்பிக்கில் மொத்தமாக இதுவரை எட்டு தங்கம், 1 வெள்ளி, 3 வெண்கல பதக்கங்களை வென்றுள்ளது. மொத்தமாக 12 பதக்கங்களை வென்றுள்ளது. இதுதான் ஒலிம்பிக் ஹாக்கியில் ஆண்கள் அணி வென்ற அதிகபட்ச பதக்கங்கள் ஆகும். இதில் ஜெர்மனி 11 பதக்கங்களை வென்று இரண்டாம் இடம் பிடித்துள்ளது. ஆஸ்திரேலியா 9 பதக்கங்களை வென்றுள்ளது. நெதர்லாந்து ஒலிம்பிக்கில் 9 பதக்கங்களை இதுவரை ஹாக்கி ஆண்கள் போட்டியில் வென்றுள்ளது.