இந்தியாவின் எதிர்பார்ப்பு
முன்னதாக நேற்று நடைபெற்ற பேட்மிண்டன் பெண்கள் ஒற்றையர் பிரிவு காலிறுதிப் போட்டியில், இந்திய வீராங்கனை பி.வி.சிந்து இந்த போட்டியில் ஜப்பானின் அகானே யாமகுச்சியை எதிர்கொண்டார். தொடக்கம் முதலே சிந்து அட்டாக்கிங் ஆட்டத்தில் ஈடுபட்டார். இதனால், இந்த சுற்றில் 21 - 13 என்ற புள்ளிக்கணக்கில் பி.வி. சிந்து முதல் செட்டை கைப்பற்றினார். 2வது சுற்றிலும் சிந்துவே ஆதிக்கம் செலுத்தினார். எனினும், முதல் செட்டை விட, யாமகுச்சி கடுமையான சவால் அளித்தார். இருந்தாலும், 2வது செட்டையும் இந்தியாவின் பி.வி.சிந்து 22 - 20 என்ற புள்ளிக்கணக்கில் கைப்பற்றினார். இதன் மூலம் காலிறுதிப்போட்டியில் அகானே யாமகுச்சியை 21 - 13, 22 - 20 என்ற நேர் செட் கணக்கில் வென்று அரையிறுதிப்போட்டிக்கு முன்னேறினார் சிந்து. 2வது பதக்கம் அரையிறுதி போட்டிக்கு சிந்து தகுதிப் பெற்றதால் இந்தியாவுக்கு வெண்கலப்பதக்கம் உறுதியானது. எனினும், அவர் தங்கம் வெல்ல வேண்டும் என்பதே ஒட்டுமொத்த இந்தியாவின் எதிர்பார்ப்பாகும். கடந்த ஒலிம்பிக்கில் பி.வி.சிந்து வெள்ளிப்பதக்கம் வென்றிருந்த நிலையில், இந்த முறை நிச்சயம் தங்கப்பதக்கம் வெல்ல வாய்ப்புள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது.
நேருக்கு நேர்
இந்த நிலையில் தான், இன்று அரையிறுதிப் போட்டி நடைபெறுகிறது. இந்திய நேரப்படி பிற்பகல் 2.30 மணிக்கு, சீன தைபே வீராங்கனையான தாய் சூ யிங்-ஐ (Tai Tzu-ying) சிந்து எதிர்கொள்கிறார். இருவரும் இதுவரை 18 முறை ஒருவருக்கொருவர் மோதியுள்ளனர். இந்த நேருக்கு நேர் மோதலில் சிந்து 5 முறை மட்டும் வென்றுள்ளார். ஆனால் இதில், ஒரு நேர்மறையான விஷயம் என்னவென்றால், டோக்கியோ ஒலிம்பிக்கில் இதுவரை விளையாடிய நான்கு போட்டிகளிலும் சிந்து தோற்கவே இல்லை. எனவே, கான்ஃபிடண்ட் லெவல் உச்சக்கட்டத்தில் உள்ளது. அதேசமயம், தாய் சூ யிங் காலிறுதியில் தான் வீழ்த்திய தாய்லாந்து வீராங்கனையான இன்டானனுக்கு எதிரான தனது தொடக்க சுற்று ஆட்டத்தில் தோற்றுள்ளார்.
சிந்து டாமினேஷன்
இந்த இரு வீராங்கனைகளுக்கு கடைசியாக HSBC BWF World Tour 2020 இல் சந்தித்தனர். இதில், பிவி சிந்து 16-21, 16-21 என்ற நேர் சுற்றில் தாய் சூ யிங்கிடம் தோற்றார். இருவரும் கடைசியாக விளையாடிய கடந்த 5 போட்டிகளில், பிவி சிந்து 3-2 என முன்னிலையில் இருக்கிறார். ஆனாலும் அந்த 5 போட்டிகளின் கடைசி 2ல் சிந்து தோற்றிருக்கிறார். இந்த சூழலில், தான் மீண்டும் இருவரும் ஒலிம்பிக்கில் அதுவும் அரையிறுதிப் போட்டியில் மல்லுக்கட்டுகின்றனர்.
வேலை பாக்கி இருக்கு
நேற்று காலிறுதிப் போட்டி முடிந்த பிறகு பேசிய பிவி சிந்து, "நான் மகிழ்ச்சியாக இருக்கிறேன். ஆனால் பயணம் இன்னும் முடிவடையவில்லை. என்னைப் பொறுத்தவரை, நான் சிறிது ஓய்வெடுத்துவிட்டு அடுத்த போட்டிக்குத் தயாராக வேண்டும். நான் மகிழ்ச்சியாக இருக்கிறேன் ஆனால் அடுத்த போட்டிக்கு நான் தயாராக வேண்டும். அடுத்த போட்டி மிக மிக முக்கியமானது" என்று தெரிவித்தார். அதே வேகத்தோடும், துடிப்போடும் மீண்டும் வந்து வெல்வாரா பிவி சிந்து?