ரசிகர்களின் எதிர்பார்ப்பு
தகுதிச்சுற்றுபோட்டி மற்றும் காலிறுதிப்போட்டியில் வென்று அசத்திய பி.வி.சிந்து நேற்று நடைபெற்ற அரையிறுதிப்போட்டியில் சீனாவின் தைபே வீராங்கனையான தாய் சூ யிங் (Tai Tzu-ying) எதிர்கொண்டார். முதல் சுற்றில் இருந்தே சீன வீராங்கனை தாய் ட்சூ யிங், புள்ளிகளை குவித்து தலைவலி ஏற்படுத்தினார். நீண்ட நேரம் சமநிலையாக சென்ற முதல் செட்டின் இறுதியில் சீன வீராங்கனை 22 -18 என்ற கணக்கில் கைப்பற்றினார். 2வது சுற்றில் இந்தியாவின் சிந்து மீண்டு வருவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், மீண்டும் சீன வீராங்கனையே ஆதிக்கம் செலுத்தினார். இதன் மூலம் 22 - 18, 21 -12 என்ற நேர் செட் கணக்கில் சீனாவின் தாய் ட்சூ யிங் வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.
முதல் செட்
இந்நிலையில் வெண்கலப் பதக்கத்திற்கான போட்டி இன்று நடைபெற்றது. இதில் சீனாவின் ஹீ பிங் ஜியாயோவை எதிர்த்து பி.வி.சிந்து மோதினார். நேற்றைய போட்டியில் விட்ட ஆக்ரோஷத்தை இந்த போட்டியில் பி.வி.சிந்து தொடக்கம் முதலே காட்டி வந்தார். சீன வீராங்கனை கம்பேக் கொடுக்க நினைத்த போதும் கூட பி.வி.சிந்து அவரை அடக்கினார். இதனால் முதல் சுற்று போட்டியை 21 - 13 என்ற கணக்கில் பி.வி.சிந்து கைப்பற்றினார்.
கடைசி நிமிடங்கள்
மிகவும் எதிர்பார்க்கப்பட்ட 2வது சுற்றுப்போட்டியிலும் பி.வி.சிந்துவின் கையே ஓங்கி இருந்தது. இதனால் முதல் சில புள்ளிகளை பி.வி.சிந்து மலமலவென உயர்த்தினார். ஆனால் சீன வீராங்கனை திடீர் கம்பேக் கொடுத்து புள்ளி வித்தியாசத்தை குறைத்தார். இதனால் 2வது சுற்றில் யார் வெற்றி பெறுவார் என பரபரப்பு எழுந்தது.
வெற்றி பெற்றார்
ஒருகட்டத்தில் சுதாரித்துக்கொண்ட பி.வி.சிந்து தொடர் ஆக்ரோஷ ஷாட்களை வைத்து மிரட்டினார். இதனால் 2வது சுற்றும் என்ற கணக்கில் சிந்துவின் பக்கம் சாய்ந்தது. இதனையடைத்து 21 - 13, 21 - 15 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று டோக்கியோ ஒலிம்பிக்கில் வெண்கலப்பதக்கத்தை வென்றார் பி.வி.சிந்து. ஒலிம்பிக்கில் அவர் பெறும் 2வது பதக்கம் இதுவாகும்.
ரசிகர்கள் ஏமாற்றம்
கடந்த ஒலிம்பிக்கில் வெள்ளிப்பதக்கம் வென்றிருந்த பி.வி.சிந்து, இந்த முறை நிச்சயம் தங்கப்பதக்கம் வென்றுவிடுவார் என எதிர்பார்க்கப்பட்டது. அதற்கேற்றார் போல அனைத்து போட்டிகளிலும் தொடர் வெற்றிகளை பதிவு செய்து வந்தார். ஆனால் அவர் தற்போது அரையிறுதிப்போட்டியில் தோல்வியடைந்து அதிர்ச்சியளித்தார். எனினும் வெண்கலப்பதக்கத்தை விட்டுக்கொடுக்காமல் வென்றிருப்பது ரசிகர்களுக்கு ஆறுதலை கொடுத்துள்ளது.