தகுதிச்சுற்று
ஆடவர் குண்டு எறிதலுக்கான தகுதிச்சுற்றுப்போட்டிகள் இன்று நடைபெற்றது. இதில் இந்தியாவின் சார்பில் தஜிந்தர்பால் சிங் கலந்துக்கொண்டார். ஒலிம்பிக் ஷாட் புட் விதிகளின்படி தகுதிச்சுற்று போட்டியில் இந்த 21.20 மீ தூரத்திற்கு எறிந்துவிட்டால் நேரடியாக இறுதிச்சுற்றுக்கு தகுதிப்பெற்று விடலாம். அப்படி எட்ட முடியவில்லை என்றால் தகுதிச்சுற்றுகளின் முடிவில் டாப் 12 இடங்களை பிடிக்கும் வீரர்களே முன்னேறுவார்கள்.
6வது இடம்
அதன்படி நேரடி நுழைவை எதிர்பார்த்து விளையாடிய தஜிந்தர்பால் சிங் நம்பிக்கையுடன் களமிறங்கினார். மொத்தம் 3வாய்ப்புகள் கொடுக்கப்படும். இதில் முதல் வாய்ப்பில் நன்கு சுழன்று வீசிய தஜிந்தர்பால் 19.99மீட்டர் தூரத்திற்கு குண்டை எறிந்தார். இதனால் முதல் வாய்ப்பின் முடிவில் தஜிந்தர்பால் சிங் 6வது இடத்தைப் பிடித்தார். முதலிடத்தில் பிரேசிலை சேர்ந்த டார்லன் என்பவர் 21 மீட்டர் வீசி முதலிடத்தை பிடித்தார்.
2வது வாய்ப்பு
2வது வாய்ப்பிலும் சிறப்பாக வீசி முதல் 12 இடங்களுக்குள் வரவேண்டும் என்ற நெருக்கடியில் இருந்த தஜிந்தர்பால், தனது முழு பலத்தையும் கொண்டு குண்டை சுழன்று எறிந்தார். ஆனால் யாரும் எதிர்பார்க்காத வகையில் அது ஃபௌல் ஆனது. இதனால் அவர் பதற்றத்திற்கு ஆளானார். திஜிந்தர்பாலின் பதற்றமே அவரின் தோல்விக்கு காரணமானது. சிறப்பாக ஆடி இருக்கவேண்டிய 3வது வாய்ப்பிலும் ஃபௌல் ஆனார்.
வெளியேற்றம்
அடுத்தடுத்த 2 ஃபௌல்களை போட்ட அவர், பின்னர் 19.99 என்ற தனது அதிகபட்ச தூரத்துடனே 13வது இடத்தை பிடித்தார். ப்ரேசில் வீரர் டார்லன் நேரடி தகுதிக்கு தேவையான 21.20மீட்ட தூரத்தை விட 12.31 சற்று அதிகமான தூரத்தில் வீசி முதலிடத்தை பிடித்து இறுதிப்போட்டிக்கு தகுதியானார்.
ஏமாற்றம்
கடைசி வரை மீண்டு விடுவார் என எதிர்பார்க்கப்பட்ட தஜிந்தர் சிங் 13வது இடம் பிடித்து வெளியேறினார். இதனால் அவரின் ஒலிம்பிக் பதக்க கனவு பொய்யானது. ஒலிம்பிக்கில் இன்று ஏற்கனவே ஆடவர் ஹாக்கி அணி, ஈட்டி எறிதலில் அன்னு ராணி ஆகியோர் தோல்வியை சந்தித்த நிலையில் தஜிந்தர்பால் சிங்-ம் ஏமாற்றத்துடன் நடையை கட்டினார்.
வல்லுநர்கள் நம்பிக்கை
கடந்த 2018ம் ஆண்டு நடைபெற்ற ஆசிய விளையாட்டு போட்டியில் தங்கம் வென்று அசத்தியவர் டாஜிண்டர்பால் சிங். தற்போது ஃபுல் ஃபார்மில் இருக்கும் இவர் டோக்கியோ ஒலிம்பிக்கில் ஏதாவது ஒரு பதக்கத்தை வென்றுவிடுவார் என நம்பிக்கை தெரிவித்திருந்தனர். ஆனால் அவை அனைத்தும் தற்போது பொய்யாகியுள்ளது.