சிமோன்
அமெரிக்காவை சேர்ந்த ஜிம்னாஸ்ட்டிக் வீராங்கனை சிமோன் பைல்ஸ். 6 ஒலிம்பிக் பதக்கங்களை வென்ற உலகின் தலைசிறந்த வீராங்கனையான இவர், டோக்கியோ ஒலிம்பிக்கில் 5 தங்கப்பதக்கங்களை வெல்வார் என எதிர்பார்க்கப்பட்டது. இதன் மூலம் ஒலிம்பிக்கில் அதிக தங்கப்பதக்கம் வென்ற பெருமை அவரை சேர்ந்திருக்கும். ஆனால் அதற்கெல்லாம் ஒட்டுமொத்தமாக முடிவு கட்டியது அவரின் மனநல பிரச்னை.
திடீர் அறிவிப்பு
கடந்த செவ்வாய் கிழமையன்று டோக்கியோ ஒலிம்பிக்கின் ஒரு இறுதிப்போட்டியில் இருந்து திடீரென வெளியேறுவதாக அறிவித்தார். இது ரசிகர்கள் அனைவருக்கும் பெரும் அதிர்ச்சியாக இருந்தது. தனக்கு அதிக மன அழுத்தம் இருப்பதாகவும், எனவே மன ஆரோக்கியத்திற்காக மருத்துவப் பரிசோதனை செய்யவிருப்பதாகவும் கூறி அவர் வெளியேறினார். இந்தாண்டு அவர் 13.766 என்ற தனது ஒலிம்பிக் வாழ்க்கையின் மிகக் குறைந்த புள்ளிகள் பெற்ற பிறகு பைல்ஸ் அரங்கிலிருந்து வெளியேறினார். எனினும் அமெரிக்க அணியின் மற்றொரு வீரர் வெள்ளிப்பதக்கம் வென்றபோது அரங்கத்திற்கு வந்து உற்சாகப்படுத்தினார்.
பேசுப்பொருள்
அவர் ஒரு இறுதிப்போட்டியில் இருந்து விலகியதால் டோக்கியோ ஒலிம்பிக்கில் அவர் 4 போட்டிகளில் தங்கம் வெல்வார் எனக்கூறப்பட்டது. ஆனால் அதற்கு ஆப்பு வைக்கபட்டது. நேற்று மாலை வெளியிட்ட அறிவிப்பில் மேலும் 2 இறுதிப்போட்டிகளில் இருந்து வெளியேறுவதாக சிமோன் பைல்ஸ் அறிவித்தார். இதுகுறித்து அறிவிப்பு வெளியிட்டுள்ள அமெரிக்க ஜிம்லாஸ்டிக் அமைப்பு, சிமோனே இன்னும் மனநிலை பிரச்னையில் இருப்பதால் அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி பின்னர் இந்த முடிவை எடுத்துள்ளார் எனக்கூறியது.
அடுத்த அறிவிப்பு
இந்நிலையில் இன்று மேலும் ஒரு இறுதிப்போட்டியில் இருந்து சீமோன் பைல்ஸ் விலகியுள்ளார். ஃப்ளோர் எக்ஸர்சைஸ் இறுதிப்போட்டியில் இருந்து அவர் வெளியேறினார். இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை அமெரிக்க ஜிம்லாஸ்டிக் அமைப்பு வெளியிட்டுள்ளது. மேலும், அவரின் பின்னால் அமெரிக்கா நிச்சயம் துணை நிற்கும் என ஆறுதல் கூறியுள்ளது.
நீடிக்கும் சந்தேகம்
உலகில் அதிக ஒலிம்பிக் பதக்கங்களை வென்ற வீராங்கனையாக சிமோனே பைல்ஸ் திகழ்வார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தற்போது அந்த எதிர்பார்ப்பு சுக்கு நூறாக உடைந்துள்ளது. 4 போட்டிகளில் இருந்து வெளியேறியுள்ளதால் மீதமுள்ள கடைசி ஒரே ஒரு இறுதிப்போட்டியிலும் அவர் பங்கேற்க மாட்டார் என்று தகவல் வெளியாகியுள்ளது.