டோக்கியோ : 2020 டோக்கியோ ஒலிம்பிக் தொடர் கொரோனா வைரஸ் காரணமாக தள்ளி வைக்கப்பட்டு இருந்த நிலையில், அடுத்த ஆண்டு ஒலிம்பிக் தொடர் நடைபெற உள்ள தேதிகள் வெளியாகி உள்ளது.
2021ஆம் ஆண்டு ஜூலை 23 முதல் ஆகஸ்ட் 9 வரை ஒலிம்பிக் தொடர் நடைபெற உள்ளதாக டோக்கியோ ஒலிம்பிக் சங்க வட்டாரங்களில் இருந்து செய்திகள் கசிந்துள்ளது.
அதே போல, பாராலிம்பிக் தொடர் அதே ஆண்டு ஆகஸ்ட் 24 அன்று துவங்கும் என தெரிய வந்துள்ளது.
முன்னதாக 2020 ஒலிம்பிக் தொடர் 2020ஆம் ஆண்டு ஜூலை 24 துவங்கி 16 நாட்கள் நடைபெற இருந்தது. ஆனால், அந்த தொடர் கடந்த வாரம் தள்ளி வைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.
கொரோனா வைரஸ் உலகை அச்சுறுத்தி வரும் நிலையில், ஜப்பான் பிரதமர் நீண்ட யோசனை மற்றும் போராட்டத்துக்குப் பின் ஒலிம்பிக் தொடரை அடுத்த ஆண்டுக்கு தள்ளி வைப்பதாக அறிவித்து இருந்தார்.
எனினும், அப்போது அவர் தேதிகளை அறிவிக்கவில்லை. இந்த நிலையில், சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி மற்றும் ஜப்பான் ஒலிம்பிக் போட்டி நிர்வாகிகள் கலந்து பேசி 2021 ஆம் ஆண்டு ஒலிம்பிக் போட்டிகள் நடக்க உள்ள தேதிகளை முடிவு செய்தனர்.
அதன் முடிவில் அவர்கள் ஜூலை 23 முதல் ஆகஸ்ட் 8 வரை ஒலிம்பிக் போட்டிகளை நடத்த முடிவு செய்துள்ளதாக தெரிய வந்துள்ளது. விரைவில் இது குறித்த அதிகாரப்பூர்வ தகவல் சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி மூலம் வெளியாகும் என கூறப்படுகிறது.